மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு; இலங்கை தமிழர்களின் கனவு நனவாகுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு; இலங்கை தமிழர்களின் கனவு நனவாகுமா?

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு; இலங்கை தமிழர்களின் கனவு நனவாகுமா?

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில், முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் 231 கோடியே 54 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி உதவித்தொகை

இந்த அடிப்படை வசதிகள் மட்டும் இல்லாமல், அவர்களது பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில், பாலிடெக்னிக் படிப்பிற்கு 2,500 ரூபாய், இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு 3,000 ரூபாய், இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு 5,000 ரூபாய் என வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை பாலிடெக்னிக் படிப்பிற்கு 10,000, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பிற்கு 12,000 ரூபாய்,

கல்வி சார்ந்த திட்டங்கள்

இளநிலை தொழில்சார்ந்த படிப்புகளுக்கு 20,000 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி இனி வழங்கப்படும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அங்குள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 321 சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயுடன், மேலும் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அன்புமணி வைத்த கோரிக்கை

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் ஈழ அகதிகளுக்கு வீட்டு வசதி, குடிநீர் வசதி, மாத உதவித்தொகை, கல்வி உதவித் தொகை ஆகியவற்றுக்காக ரூ.317 கோடியில் 10 புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஈழ அகதிகள் நலன் காக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது. ஈழத்தமிழ் அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கை மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடு தேவை என்பதாகும்.இது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு, கலைஞர் ஆட்சியில் கட்டண விலக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறந்த திட்டம். இது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வியில் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதில் சட்ட சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், அதைக் களைந்து மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad