என் உயிருக்கு ஆபத்து: கதறும் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் தற்போது அரசியல் அரங்கில் ஹாட் டாபிக். அவர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ஒரு வாரம் ஆகும் நிலையிலும் அந்த விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
வேலுமணியின் சகோதரர் அன்பரசன். வேலுமணிக்காக மற்றவர்களுடன் டீல் பேச, ஒப்பந்தங்களை
முடிக்க என அன்பரசன் தான் முக்கியத்துவம் வாய்ந்த நபராக வலம் வருகிறார். இந்நிலையில் அன்பரசன் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனக்கும் தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். “கோவை புதூரை சேர்ந்த எனக்கு தெரிந்த திருவேங்கடம் என்ற நபர் தனது தொழில் நொடிந்து விட்டதாகவும் மனைவியின் நகை சொத்துக்களையெல்லாம் அடமானம் வைத்து நஷ்டம் அடைந்ததாகவும் சொல்லி புலம்பினார்.
5 லட்சம் ரூபாய் என்னிடம் கடனாக கேட்டார்.
இதனால் சொந்த ஜாமீனில் நான் எனக்கு தெரிந்த நண்பரிடம் கடனாக கேட்டதால் எனது நண்பர் ஒருவர் திருவேங்கடத்திற்கு ஐந்து லட்சம் கடன் கொடுத்தார். இதன் பின்னர் பத்திரிகை நிருபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவேங்கடம் சொன்னதாக சொல்லி என்னை பற்றி செய்தி வெளியிட போவதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அதன்பின்னர் திருவேங்கடம் என்னை தொடர்பு கொண்டு
ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இதை தடுத்து நிறுத்தி விடுகிறேன் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த போது சில நாட்களில் செய்தி வெளியாகி வருகிறது. எனக்கு மீண்டும் என்னை தொடர்பு கொண்ட திருவேங்கடமும் நான் சொன்னபடியே செய்தி வெளியாகி விட்டது. அடுத்ததாக நீங்கள் என்னை மிரட்டுவதாக சொல்லி போலீசாரிடம் புகார் அளிக்கப் போகிறேன். அதனால் நான் கேட்ட பணத்தை உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டுகிறார். அவரின் நோக்கம் எல்லாம் எனக்கு புரிந்து விட்டது.
கட்சியில் என் சகோதரர் பெயரையும், என் பெயரின் மதிப்பையும் கெடுத்து தன்னுடைய பலத்தை கட்சியில் அதிகரிக்க நினைக்கிறார். அதற்காகத்தான் இப்படி மிரட்டி வருகிறார். திருவேங்கடத்தால் என் உயிருக்கும் என் குடும்பத்தின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். அதனால் திருவேங்கடம் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று அன்பரசன் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment