மக்களின் பங்களிப்போடு உருவாகுமா கருணாநிதி நினைவில்லம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, August 25, 2021

மக்களின் பங்களிப்போடு உருவாகுமா கருணாநிதி நினைவில்லம்?

மக்களின் பங்களிப்போடு உருவாகுமா கருணாநிதி நினைவில்லம்?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டத்தக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. பதவியேற்ற 110ஆவது நாள், 110ஆவது விதியின் கீழ் முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு, 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

‘பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை குறித்து, அவசரமாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றால், அதை அவை விதி எண் 110இன் கீழ் அறிவிக்கலாம். இந்த அறிவிப்பின் கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது’ என்பது பேரவை விதி.

‘விவாதம் நடத்தக் கூடாது என்கிற அளவுக்கு நினைவிடம் அவ்வளவு பொது முக்கியத்துவம் வாய்ந்ததா?’ என்ற கேள்வி ஒருபுறம்; ‘விமர்சனங்களை எதிர்கொள்வதிலும், அவை சரி என்றால் தங்களது கருத்தை மாற்றிக்கொள்வதிலும் கனிந்திருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தை ஏன் 110இன் கீழ் அறிவித்தார்!’ என்ற ஆச்சரியம் மறுபுறம்!

சட்டமன்றத்தில் விவாதம் நடத்தக் கூடாதுதான். ஆனால் பொதுத்தளத்தில் நாம் அது குறித்து அலசத் தடை இல்லையே!

‘காமராஜர் சாலை – மெரினா கடற்கரையில் - அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே 2.21 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் அமைக்கப்படும். அங்கு, கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வியக்கவைக்கும் பன்னீரின் ஆதரவு

இதைக் கூட்டணிக் கட்சிகள் வரவேற்கும் என்பது பெரிய விஷயமல்ல; ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக. வரவேற்றிருக்கிறது! அக்கட்சியின் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ‘கருணாநிதிக்கு நினைவிடம் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு! அவரைப் பற்றிய அனைத்துச் சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெறக் கோரிக்கை வைக்கிறேன். என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கருணாநிதியின், 'பராசக்தி' பட வசனப் புத்தகம் இருக்கும். தந்தை இல்லாத நேரங்களில் அதை எடுத்து படிப்போம்!’ என்றெல்லாம் பேசி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

அவருடைய பாராட்டுக்கு ஏன் ஆச்சரியம் ஏற்பட வேண்டும்?

2017 ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி மறைந்த போது, அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. ‘அண்ணா சமாதி அருகே, கருணாநிதி உடலை அடக்கம் செய்ய வேண்டும்’ என மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிமுக அரசு மறுத்தது. பிறகு நள்ளிரவில், நீதிபதியை நாடி உத்தரவு பெற்று, கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்தனர் திமுகவினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய அரசு, ‘ அங்கே அடக்கம் செய்ய அனுமதித்தால், பிறகு நினைவிடம் அமைக்கக் கோருவார்கள்!’ என்றது.

அந்த அரசின் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி. துணை முதலமைச்சர் இதே பன்னீர் செல்வம்.

‘தொட்டால் உதிரும் புளியந்தோப்பு அடுக்குமாடிக் கட்டட விவகாரத்தில் தப்பிக்க திமுக அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறாரோ?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

பன்னீரின் நிலைப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கடும். கருணாநிதிக்கு நினைவிடம் எழுப்பப்படுவதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கிறோம்!

MK Last rally
சாதனைகளின் நாயகன்

விமர்சனங்களை மீறி, கருணாநிதியின் சாதனைகள் வியக்க வைக்கின்றன.

அவரது ஆட்சிக் காலங்களில்தான் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. மூன்றுமே இந்திய ஒன்றிய அளவில் முன்னோடித் திட்டங்கள்!

பார்வையற்றோருக்கு அறுவை சிகிச்சை செய்து கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்கள்.

நில உச்சவரம்புச் சட்டம்.

விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம்.

உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி.

விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி.

கலப்பு மணத் தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை..

பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு.

இடஒதுக்கீட்டு அளவை 69 சதவீதமாக உயர்த்தியது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள்.

அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு.

உழவர் சந்தை.

சமத்துவபுரம்.

பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்குச் சிற்றுந்து.

மெட்ராஸ் என்பது அதிகாரப்பூர்வமாகச் சென்னை என மாற்றம்.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடி ஏற்றும் உரிமை.

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கெனத் தனி அமைச்சர்.

- இப்படிக் கருணாநிதியின் சாதனைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். எனவே அவருக்கு நினைவிடம் என்பதும் அங்கே அவரது சாதனைகளை அறியும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதும் சிறப்பான ஒன்றுதான்.

ஆனால், தற்போது தமிழ்நாட்டின் நிதிநிலை என்ன?

சாதாரணமாகவே கடன். இதில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஏகத்துக்குக் கடன். தவிர கொரோனா தொற்றால் கூடுதல் செலவு, ஊரடங்கு காரணமாக வருமானம் இழப்பு என தமிழ்நாடு அரசின் நிதி நிலை தள்ளாடுகிறது.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிட்ட, தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது’ என்றார். பிறகு, ‘கடன் தொகை இன்னும் அதிகம்’ என்றார்.

அதோடு, ‘அரசு ஊழியர்களுக்கு இப்போது அகவிலைப்படி உயர்வு கிடையாது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கே நிதி ஒதுக்க சிரமமப்படுகிறோம்!’ என்றார்.

இந்த நிலையில்தான் அரசுப் பணம் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் தேவையா என்ற கேள்வி எழுகிறது.

பதிலுக்கு, ‘கடந்த அ.தி.மு.க. அரசு ரூ.57.8 கோடியில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டவில்லையா?’ என்று கேட்பவர்கள் இருப்பார்கள்.

‘அந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் சரியில்லை; நாங்கள் சிறப்பான ஆட்சி அளிப்போம்’ என்று சொல்லித்தானே திமுக வாக்கு கேட்டது! பிறகு ஏன் அதிமுக ஆட்சியுடன் தங்களை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்?

அரசுதான் செய்ய வேண்டுமா?

ரூ. 1000 கோடியிலான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளதையோ, மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக இருக்கும் அரசு நூலகத்துக்கு, கலைஞர் என்னும் பெயர் சூட்டவிருப்பதையோ நாம் குறை சொல்லவில்லை. மக்களுக்குத் தேவையான திட்டங்கள் அவை. அதற்கு முன்னாள் முதல்வர் பெயரைச் சூட்டுகிறார்கள். அவ்வளவே.

நினைவகம் அமைக்க மக்கள் பணம் ரூ.39 கோடியைச் செலவிடுவது அவசியமா என்பதே கேள்வி.

திமுகவின் தலைமையமான அண்ணா அறிவாலயம், சென்னையில் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது. கட்சி அலுவலகம் என்பதையும் மீறி, அங்கே வியக்கவைக்கும் செயல்பாடுகள் பல உண்டு.

அங்குள்ள ‘கலைஞர் கருவூலம்’ சென்றால் திமுக வரலாற்றை மட்டுமல்ல, ஒட்டுமொத்த திராவிட இயக்க வரலாற்றையே அறிந்துகொள்ளலாம். அற்புதமான புகைப்படக் கண்காட்சி அது!

இன்னொரு பகுதியில் உள்ள, ‘பேராசிரியர் ஆய்வு நூலகம்’ மிகச் சிறப்பானது. ஆய்வு மாணவர்கள் பலர் குறிப்பெடுத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். சென்னையில் உள்ள முக்கிய நூலகங்களில் இதுவும் ஒன்று.

தவிர, கண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இலவச சோதனையும் கண்ணாடியும் முன்பு வழங்கப்பட்டுவந்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகு, இங்கேயே அறுவை சிகிச்சை செயயவும் ஏற்பாடு செய்துள்ளார். வாரம் பத்து, பன்னிரண்டு அறுவை சிகிச்சைகள் அண்ணா அறிவாலயத்தில் நடக்கின்றன.

அண்ணா அறிவாலயத்திலேயே இடம் ஒதுக்கி, கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும்படியான கண்காட்சி ஒன்றை அமைக்கலாமே.

இதை, அவரது வாரிசுகள் செலவு செய்து அமைக்க வேண்டும் என்பதில்லை. கட்சியினர் செய்ய வேண்டும் என்பதும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்போடு அதை அமைக்கலாமே!

ஒருவேளை, கருணாநிதியின் சமாதி அருகிலான கட்டிடத்தில்தான் நினைவில்லம் அமைக்க வேண்டும் என விரும்பினால், அதற்கான தொகையைக்கூட மக்களின் பங்களிப்போடு திரட்டலாமே!

மக்களுக்குப் பல நல்ல திட்டங்களை அளித்த மறைந்த முதலமைச்சருக்கு அதுதான் பெருமை!

அப்படிச் செய்தால் அது நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad