அந்தரங்கம் அம்பலம்: பெண்கள் மீது தவறில்லையா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, August 28, 2021

அந்தரங்கம் அம்பலம்: பெண்கள் மீது தவறில்லையா?

அந்தரங்கம் அம்பலம்: பெண்கள் மீது தவறில்லையா?

பாஜகவைச் சேர்ந்த விவகாரத்தில், சட்டப்படி இது சரியா தவறா என்று ஆரம்பித்து, அரசியல் பிரமுகர் இப்படிச் செய்யலாமா, இந்து மதக் காவலர் என்று சொல்லிக்கொள்பவர் இப்படி நடந்துகொள்ளலாமா என்றெல்லாம் தொடர்ந்த கேள்விகள் கடைசியில், ‘சம்பந்தப்பட்ட அந்த பெண் யார்.. அவருடைய சம்மதத்துடன்தானே பேசியிருக்கிறார்.. இப்போது அந்தப் பெண் ராகவனை அம்பலப்படுத்த அவசியம் என்ன, அந்தப் பெண் சரியானவர்தானா’ என்ற கேள்வியில் முடிந்திருக்கிறது.

எப்போதுமே, பாலியல் புகார் கிளம்பினால் அது முடியும் புள்ளி அந்த பெண்ணைப் பற்றியதாகவே இருக்கிறது.

மீடூ விவகாரம் பூதாகரமாய் கிளம்பியபோதும் இதுதான் நடந்தது. ‘உடனடியாகப் புகார் சொல்லாமல் தாமதித்தது ஏன்? காரியத்துக்காக உடன்பட்டு, வளர்ந்த பிறகு புகார் சொல்கிறார்களா அல்லது நினைத்தது நடக்கவில்லை என்ற பிறகு புகார் சொல்கிறார்களா?’ என்று பெண்களை நோக்கியே கேள்விகள் எழுப்பப்பட்டன.

யோசித்துப் பார்த்தால், இந்தக் கேள்விகள் எல்லாமே, விடை தெரிந்தே கேட்கப்படுபவை எனலாம். ஆனாலும் நாம் இது குறித்து தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

பாலியல் வன்முறையின் வகைகள்

முதலில் நேரடி பலாத்காரத்துக்கு வருவோம். திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றம் போல் (நேரடி) பலாத்கார குற்றத்தை நமது சமுதாயம் பார்ப்பது இல்லை. மற்றவற்றில், குற்றமிழைத்தவரை இகழும் சமுதாயம், பலாத்கார விவகாரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணை இகழும். அருவெறுப்பாகப் பார்க்கும். அதனாலேயே, புகார் கொடுக்க பெண்கள், அவர்கள் குடும்பத்தினர் தயங்கும் போக்கு நிலவுகிறது. இதையெல்லாம் மீறித்தான் நியாயத்துக்காக அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. ‘அவளும் உடன்படத்தானே செய்தாள்!’ என்கிற வியாக்கியானத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பெண் கொஞ்சமும் உடன்படாத நேரடி பலாத்காரத்துக்குச் சற்றும் குறையாததுதான் நிர்ப்பந்தப்படுத்தி உடன்பட வைப்பதும். தந்தை, தாய், பிள்ளை என யாரோ ஒருவரது கழுத்தில் கத்தியை வைத்து, ‘உடன்படுகிறாயா இல்லையா’ என்று நிர்ப்பந்திப்பதும் வல்லுறவுதானே!

ஆய்வு மாணவிகளை, வழிகாட்டிகள் (கைடு), தனது விருப்பத்துக்கு உடன்பட வேண்டும் இல்லாவிட்டால், ஆய்வை முடிக்க முடியாது என நிர்ப்பந்திப்பது நடக்கிறது எனப் பல காலமாகவே புகார்கள் உண்டு. இது குறித்த அதிர்ச்சிக் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

சமீபத்தில்கூட, பிரபல வழக்கறிஞர் ஒருவர், ‘கல்லூரி காலத்தில் பேராசிரியர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள், அந்த நபர்களைச் சொல்லுங்கள்’ எனப் பதிவிட, ஏராளமான பெண்கள், தங்களைச் சீண்டிய பேராசிரியர்கள் பெயர்களைப் பதிவிட்டனர் (வெளிப்படையாக இப்படிப் பதிவிட்டது சரியா என்கிற விவாதமும் நடந்தது).

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தது நினைவிருக்கும்.

‘மனைவியை விவாகரத்து செய்துட்டு என்னைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்தார்.. சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம் (லிவிங் டு கெதர்). இப்போது திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் வற்புறுத்தினால் நடப்பதே வேறு என்றும் மிரட்டினார்’ என்பதுதான் நடிகை அளித்த புகார்.

இருவர் விரும்பி சேர்ந்து வாழ்வது வேறு. அதிகாரத்தில் இருப்பவர், ‘பல்வேறு உதவிகள் செய்கிறேன், திருமணம் செய்துகொள்கிறேன்..’ என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்து, உறவுகொள்வது வேறு. இரண்டாவதில் பெண்ணின் சம்மதத்தைப் பெற அதிகாரம் உதவியிருக்கிறது. ஆகவே இதுவும் பலாத்காரம்தான்.

பலாத்காரம்: சட்டம் அளிக்கும் வரையறை

harrassement
இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவு இதைத் தெளிவாகச் சொல்கிறது. பலாத்காரம் வன்புணர்வு என இப்பிரிவு சொல்வது இதைத்தான்:

1. பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக உறவு கொள்வது

2. பெண்ணின் விருப்பம் இல்லாமல் உறவு கொள்வது

3. மனநிலை சரியில்லாமல் இருக்கும் பெண்ணுடன் உறவு கொள்வது (பெண் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும்)

4. பெண் மயக்கத்தில் அல்லது போதையின் தாக்கத்தில் இருக்கும் போது உறவு கொள்வது

ஐந்தாவதாகக் குறிப்பிடப்படுவது மிக முக்கியம்.

5 . பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அந்த சம்மதம் பெறுவதற்காக அந்தப் பெண்ணிற்கோ அவரது நெருங்கியவர்களுக்கோ கொலை மிரட்டல் விடுவது, கெடுதல் செய்வதாக பயமுறுத்துவது ஆகியவையும் வன்புணர்வே என்கிறது சட்டம்.

இதே போலத்தான், திருமணம் உள்ளிட்ட ஆசை காட்டி உறவு கொள்வதும்.

அடுத்து பெண்கள் எதிர்நோக்கும் அம்பு, ‘தாமதம் ஏன்’ என்பது! பொதுவாக, ஒரு குற்றச் செயலுக்கான தண்டனைக் காலம் எவ்வளவோ, சம்பவம் நடந்த நாளில் இருந்து அந்தக் காலத்துக்குள் புகார் அளிக்க வேண்டும் என்பதுதான் சட்டம்.

அதே நேரம், குற்றம் செய்தது யார் எனப் பாதிக்கப்பட்டவருக்கே தெரியாத சூழல் இருந்தால், பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் என எப்போது தெரிய வருகிறதோ, அந்த நாளில் இருந்து கால வரம்பைக் கணக்கிடுவார்கள்.

ஆனால், இந்தப் பொது விதிகளுக்குட்பட்டு எல்லா பெண்களாலும் புகார் கொடுத்துவிட முடியாது என்பதுதான் இங்கே நிலவும் யதார்த்தம். ஏற்கெனவே சொன்னது போல, ‘நாலு பேர்’ என்ன சொல்வார்களோ என்கிற சமூக அச்சம்! அத்துமீறியவரின் சமூக அந்தஸ்தும் அதிகாரமும்கூட வெளியில் பேச விடமல் பெண்களைத் தடுத்துவிடும்.

தற்போது பரபரப்பைக் கிளப்பியிருக்கும் அந்த வீடியோவில் கே.டி.ராகவன் போன்ற தோற்றமுள்ள அந்த நபர், அலைபேசியின் எதிர்ப்புறமுள்ள பெண்ணிடம், ‘மாராப்பை விலக்கு’ எனச் சைகை காட்டுகிறார். இது போன்ற பாலியல் குற்றங்களில் வர்க்கம், பாலினம், கல்வி (!), அதிகாரம் எல்லாம் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்!

இந்தியாவில் பெண்களின் நிலை

harrassment
இந்தியாவில், ஏராளமான பெண் தெய்வங்கள் வணங்கப்படுகின்றன (அவர்கள் தெய்வமான வரலாறுகளும் கொடுமையானவையே). ஆறுகளுக்குப் பெண்கள் பெயர் வைக்கப்படுகின்றன.. நாடு, மொழி எல்லாம் பெண்ணாக உருவகப்படுத்தப்படுகின்றன.

ஆனால், பெண்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் சில இடங்களில் உள்ளது. நீண்ட ஆய்வுக்குப் பிறகு இதை தெரிவித்திருக்கிறது பிரிட்டன் நிறுவனம் ஒன்று. இதை மத்திய அரசு கடுமையாக மறுத்தது. ஆனால் சமீபத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

2014-16 ஆண்டுகளில் நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதோடு, தேசியப் குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) ‘க்ரைம் இன் இந்தியா’, ‘ 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக மொத்தம் 4,05,861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்கிறது. இது 2018ஐ விட 7.3% அதிகம் எனக் கூறியுள்ளது.

தன்னிடம் வேலை கேட்டு வரும் ஆணிடம் பணத்தையும் பெண்ணிடம் செக்ஸையும் எதிர்பார்க்கும் ஆண்மய உலகமாகத்தானே நம்முடைய சூழல் இருக்கிறது. பெண்களை நிர்ப்பந்தப்படுத்தி, ஆசைகாட்டி, அச்சுறுத்தி உடன்படவைப்பது என்பது காலங்காலமாக நடக்கும் கொடுமைதானே. அதன் பிறகு அவளையே குற்றம் சுமத்துவது அதைவிடவும் கொடுமைதானே.

பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்படும் பெண்கள் வாய் திறக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வோம். பெண்களின் சம்மதம் என்பதை ஆண்கள் பெறுவதன் பின்னால் உள்ள அதிகாரக் கணக்குகளைப் புரிந்துகொள்வோம். பெண்களையே குற்றம் சுமத்தும் வழக்கத்தை இனியாவது கைவிடுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad