நீட் – 2: நுழைவுத் தேர்வுக்கு மாற்று என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

நீட் – 2: நுழைவுத் தேர்வுக்கு மாற்று என்ன?

நீட் – 2: நுழைவுத் தேர்வுக்கு மாற்று என்ன?

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்க்கிறார்கள்?
மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களை எடுத்துக்கொள்வோம். பொறியியல், மருத்துவம், சட்டம், மேலாண்மை ஆகிய தொழிற்கல்விகள் மட்டுமல்ல, கலை, அறிவியல் என ஜே.என்.யூ, மத்தியப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றிலும்கூட நுழைவுத் தேர்வுமூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள மருத்துவம் அல்லாத தனியார் தொழிற்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தமக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அல்லது மத்திய அரசின் ஜேஇஇ போன்ற தேர்வுகளைப் பயன்படுத்தி மாணவர்களைத் தெரிவு செய்கின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட்டின் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர்.

இந்தப் பின்னணியில், தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களை எடுத்துக்கொள்வோம். இவற்றில் கலை, அறிவியல், கல்வியியல் போன்ற படிப்புகளுக்கு இதுவரையில் நுழைவுத் தேர்வு இருந்ததில்லை. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் மக்கள் போட்டிபோடுவது தொழிற்கல்விக்கு (மருத்துவம், பொறியியல், சட்டம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு) மட்டும்தான். இவற்றிலும் மருத்துவத்துக்குத்தான் பெரும் போராட்டமே.
ஒரு காலத்தில் இக்கல்லூரிகளுக்கு நேர்முகம் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் பக்கச்சார்பு இருப்பதாகவும் வெளிப்படைத்தன்மை இல்லையென்றும் கருதப்பட்டது. எனவே எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, 1984-85ஆம் கல்வியாண்டு முதல் தொழிற்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போதே இதனை திமுக எதிர்த்தது. பின்னர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2007-08இல் இந்த நுழைவுத் தேர்வுகளை நீக்கினார்.

அதனால், தமிழகத்தில் மட்டும் தொழிற்கல்வியில் நுழைவுத் தேர்வு இல்லாத சேர்க்கைமுறை அமலில் இருந்தது. அதன் பின் மருத்துவத்துக்கு மட்டும் நீட் தேர்வு அமலுக்கு வந்தது. தமிழகம் தவிர இந்தியாவில் வேறு எங்குமே நீட்டுக்கு எதிர்ப்பு கிடையாது.

ஏன் தலையிட வேண்டும்?
court
அமெரிக்காவில், அரசுப் பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, தனியார் பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, மாணவர் சேர்க்கையைப் பொருத்தமட்டில் அரசின் தலையீடு கிடையாது. ஒவ்வொரு பல்கலைக்கழகமும், தனக்கான மாணவர் சேர்க்கை முறையை உருவாக்கிக்கொள்கிறது. அவர்கள் ஆளுக்கு ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவதில்லை. மாறாக, தரப்படுத்தப்பட்ட தேர்வு (Standardised Test) ஒன்றை நடுநிலையான தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி, மாணவர்களுக்குத் தரச்சான்றிதழை அளிக்கிறது. ஒரு பல்கலைக்கழகம், அந்த மாணவரின் பள்ளி இறுதி மதிப்பெண்கள், தரப்படுத்தப்பட்ட தேர்வின் மதிப்பெண், மற்றும் பலவற்றைக் கருத்தில் கொண்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள்.

ஐரோப்பாவின் பல பல்கலைக்கழகங்களும் அவரவருக்கு என்று தனியான மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு அரசு நிதி உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கும் அரசுகள் இந்தச் சேர்க்கை முறையில் தலையிடுவதில்லை. நீதிமன்றங்களும் அதிரடித் தீர்ப்புகளைத் தருவதில்லை.
இந்தியாவில் நாம் மூன்று பெரும் சிக்கல்களைப் பார்க்கிறோம். ஒன்று: கல்வி நிலையங்களுக்குச் சிறிதும் தன்னாட்சி அதிகாரம் இல்லை. தனியார் கல்வி நிலையமாக இருந்தால்கூட அரசின் தலையீடு இருக்கிறது. முக்கியமாக மாநில அரசின் கீழ் வரும் கல்வி நிலையங்களில் இது படுமோசம். இரண்டாவது: பொதுப் பட்டியலில் இருக்கும் சில துறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. மூன்றாவது: கல்வித் துறையில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு யாரும் நீதிமன்றத்துக்குப் போய்விடலாம். நீதிபதிகளும் உடனேயே தீர்ப்பு எழுதிவிட்டுப் போய்விடுகிறார்கள். நீட் முழுவதுமே இப்படி உருவாக்கப்பட்ட பிரச்சினைதான்.

எத்தகைய மாற்றங்கள் தேவை?
medical college
உலகின் பிற பகுதிகளில் நடப்பதன் அடிப்படையில் இந்தியாவில் எம்மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரலாம்?
(1) நுழைவுத் தேர்வுக்கு மாற்றாக, தரப்படுத்தப்பட்ட தேர்வை முன்வைக்கிறேன். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நுழைவுத் தேர்வு என்பது முடிந்தவரை மாணவர்களைக் கழித்துக் கட்டிவிட்டு, ரேங்க் அடிப்படையில் ஒரு வரிசையை உருவாக்குவது. தரப்படுத்தப்பட்ட தேர்வு என்பது ஒரு மாணவர் எந்த அளவுக்கு அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்பதைக் கணக்கிடுவது. தரப்படுத்தப்பட்ட தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கேள்வித்தாள் கிடையாது. நீங்கள் எழுதும்போது உங்களுக்கு என்று பிரத்யேகமாகக் கேள்விகள் வரும். நீங்களே இன்னொரு நாள் அதே தேர்வை எழுதினால் அன்று உங்களுக்கு வேறு கேள்விகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் பெறும் பெர்செண்டைல் ஸ்கோரில் மாற்றம் இருக்காது. இருந்தாலும் மிகச் சிறிய அளவுதான். அப்படிப்பட்ட பிரத்யேகத் தேர்வை உருவாக்க மிகப் பெரிய உழைப்பு தேவைப்படுகிறது.

(2) ஒவ்வொரு கல்வி நிலையமும் - தனியாரோ, அரசின் கீழ் உள்ளதோ - தனக்கான மாணவர் சேர்க்கை முறையைத் தீர்மானித்துக்கொள்ளலாம். அது வெளிப்படையானதாக, முன்னமேயே வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். இதில் அரசின் தலையீடு இருக்கவே கூடாது. வழிகாட்டு நெறிமுறைகள் என்று சில இருக்கலாமே தவிர, அதையும் எப்படிச் செயல்படுத்துவது என்பதைக் கல்வி நிலையமே முடிவு செய்துகொள்ள வேண்டும்.

(3) தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்தால் அதைக் குறித்து அரசு கவலைப்படக் கூடாது. அதனைக் கட்டுப்படுத்துவது அரசின் வேலை அல்ல. ஆனால் அப்படி வசூலிக்கப்படும் கட்டணம் வெளிப்படையாக (வெள்ளையில், கறுப்பில் அல்ல) வசூலிக்கப்பட்டு, தேவைப்பட்டால் வரியும் கட்டப்படவேண்டும். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அசோகா பல்கலைக்கழகம், ஃபிளேம், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், ஜிண்டால் பல்கலைக்கழகம் போன்ற புதிய தனியார் பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் துறைகளில் படிக்க என்ன கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பாருங்கள்! அதைத் தாண்டி ஏழைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அரசு நினைத்தால், அரசுக் கல்லூரிகளைக் கட்டுங்கள் அல்லது தனியார் கல்லூரிகளில் படிக்க உதவித்தொகை வழங்குங்கள்.

(4) ஒவ்வொரு கல்லூரியும் - அரசோ, தனியாரோ - அவரவருக்குரிய தரக் கட்டுப்பாட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும். வேலூர் சிஎம்சி, தன் விருப்பத்துக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியும் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜும் அவரவர்களுக்குரிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும். அதில் தரப்படுத்தப்பட்ட தேர்வுக்கு ஒரு வெயிட்டேஜ், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு ஒரு வெயிட்டேஜ், அவர் முதல் தலைமுறைப் பட்டதாரி என்றால் அதற்குக் கூடுதல் வெயிட்டேஜ், பெண் என்றால் கூடுதல் வெயிட்டேஜ், கிராமப்புறம் என்றால் அதற்கென ஒரு வெயிட்டேஜ் என்றெல்லாம் வைத்துக்கொள்ளுங்கள். இட ஒதுக்கீட்டை அப்படியே பின்பற்றுங்கள். ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை தாருங்கள். ஆனால் அனைவரும் ஒரே கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பது தேவையில்லை, இட ஒதுக்கீட்டைத் தவிர.

இப்படியெல்லாம் ஒவ்வொரு கல்லூரிக்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுத்தால் பெரும் தவறுகள் நிகழும் என்று நீங்கள் கருதினால், அந்த நிமிடமே நீங்கள் தன்னாட்சியை விட்டுக்கொடுத்துவிடுகிறீர்கள். கல்லூரியின் தன்னாட்சியை நீங்கள் மாநில அரசுக்கு மாற்றுகிறீர்கள். அவர்கள் ஒற்றைத் திட்டத்தின் கீழ் சேர்க்கையை மாற்றுகிறார்கள், ஒற்றைச் சாளர முறையைக் கொண்டுவருகிறார்கள். சின்ன பிரச்சினை என்றால்கூட, உடனே ரிட் பெட்டிஷன்கள் நீதிமன்றம் செல்கின்றன. நீதிபதிகள் தம் இஷ்டத்துக்கு ஆணை பிறப்பிக்கிறார்கள். உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்பு அமர்வை நியமிக்கிறது. அவர்கள் யாருமே கேட்காதவற்றுக்கும் சேர்த்து ஓர் ஆணையைப் பிறப்பிக்கிறார்கள். உடனே மத்திய அரசு உள்ளே வருகிறது. அவர்கள் மாநிலங்களின் தன்னாட்சியைக் குலைக்கிறார்கள்.

உடனே அரசியல் சிக்கல் வந்துவிடுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad