லாக்டவுன் போட்டே ஆகணும்; உறுதியாக சொன்ன மத்திய அரசு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் உக்கிரம் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும். ஏராளமாக உயிர்களை கொத்து கொத்தாக பலி வாங்கியது. எண்ணற்ற உறவுகளை இழந்து தீராத வேதனைக்கு ஆளாக நேர்ந்தது. கடந்த இரு மாதங்களாக நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆனால் கேரளாவில் மட்டும் கொரோனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராமல் ஆட்டம் காட்டி வருகிறது.
இது அண்டை மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி, மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக காணப்படுகிறது. முதல் அலையை திறம்பட கையாண்டு ’கேரளா மாடல்’ என்ற விஷயத்தை நாடு முழுவதும் பேசும்படி செய்தது. ஆனால் இரண்டாவது அலையில் எல்லாம் தலைகீழாக மாறிப் போனது. இவ்வாறு தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு இடையில் ஓணம் பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்ட தளர்வுகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.
அதன்பிறகு தினசரி பாதிப்புகள் தொடர்ந்து ஏறுமுகமாகத் தான் உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தில் இருந்து வெளியான தகவலின்படி, கேரளாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடும் ஊரடங்கு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு மண்டல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் மத்தியில் கேரளாவில் நோய்த்தொற்று படிப்படியாக குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதுவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் சூழலை கவனிக்கையில் நோய்த்தொற்று பரவும் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. இத்தகைய சூழலில் ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விழாக்காலம் என்பதால் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்கள், இரவுநேர ஊரடங்கு போன்றவை கொரோனா பரவும் சங்கிலியை உடைக்க பெரிதும் உதவும். இந்த விஷயத்தில் டெல்லியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டதன் காரணமாகவே நிலைமை மோசமடைந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது.
No comments:
Post a Comment