யார் இந்த சரண்ஜித் சிங் சன்னி? - பஞ்சாப் புதிய முதல்வர் குறித்த பிரத்யேக தகவல்கள்!
யார் இந்த சரண்ஜித் சிங் சன்னி? - பஞ்சாப் புதிய முதல்வர் குறித்த பிரத்யேக தகவல்கள்!
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் அமரீந்தர் சிங், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமரீந்தர் சிங்கின் ராஜினாமா மாநில அரசியலில் புயலைக் கிளப்பியது.
ராஜினாமா செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியால் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டு விட்டேன். இனியும் அவமானப்பட முடியாது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, சம்கவுர் சாஹிப் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் சுக்ஜிந்தர் சிங், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகிய நிலையில், சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
58 வயதாகும் சரண்ஜித் சிங் சன்னி, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பஞ்சாப் மாநில முதலமைச்சர் ஆவது இதுவே முதன்முறை. இவர், சம்கவுர் சாஹிப் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து, காங்கிரஸ் சார்பில், மூன்று முறை போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவையில், தொழில்நுட்ப கல்வி அமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி வகித்துள்ளார்.
2015 - 2016 வரை, பஞ்சாப் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் சரண்ஜித் சிங் பதவி வகித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இவர் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment