'நாகேஷ் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ பிறந்திருந்தால்'... - கமல் உருக்கம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

'நாகேஷ் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ பிறந்திருந்தால்'... - கமல் உருக்கம்

'நாகேஷ் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ பிறந்திருந்தால்'... - கமல் உருக்கம்

தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றழைக்கப்பட்ட நடிகர் நாகேஷின் நினைவு நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசிடம் வைத்துள்ளார்.
அதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது '' நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களில் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.


1958-ல் 'மனமுள்ள மறுதாரம்' படத்தில் அறிமுகமாகி 2008-ல் 'தசாவதாரம்' வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப் பயணம். எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதோ, விருதுகள், அங்கீகாரங்களுக்கோ ஆள் பிடிப்பதோ நாகேஷின் இயல்பல்ல. அதன் பொருட்டே வாழும்போதும் வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன் அவர்.

1974-ல் தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது, 1994-ல் 'நம்மவர்' திரைப்படத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் சிறந்த துணை நடிகர் விருது ஆகியவைதான் அவரது கலை வாழ்வில் கிடைத்த சிறு அங்கீகாரங்கள். என்னைப் பொறுத்தவரையில் சினிமாவின் எந்த உயரிய விருதுக்கும் தகுதியானவர் நாகேஷ். இவர் பிரான்ஸிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிறந்திருந்தால் இவர் பெற்றிருந்திருக்கக் கூடிய கவுரவம் என்னவாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கிறேன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சக கலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்த மகத்தான நடிகரின் கலைப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad