கடைகள் இயங்காது, இன்று முழு ஊரடங்கு; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்ட தொடர்ச்சியான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நோய்த்தொற்றின் தீவிரம் குறையத் தொடங்கியது. இதையொட்டி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. அதேசமயம் சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்புகள் அதிகமாக காணப்பட்டன. அவற்றில் மாவட்ட ஆட்சியர்களே உரிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கோயம்புத்தூர் மூன்று இலக்க எண்ணிக்கையில் பாதிப்புகளை பதிவு செய்து தொடர்ந்து அதிர்ச்சி காட்டி வந்தது. ஒருகட்டத்தில் சென்னையை மிஞ்சி மிக மோசமான நிலைக்கு சென்றது. இதனால் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை பெரிய அளவில்
தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாத இறுதியில் தினசரி தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. 300ஆக இருந்த பாதிப்புகள் மே 24ஆம் தேதி 4,300ஐ தாண்டி அதிர்ச்சி கொடுத்தது.
இன்று முழு ஊரடங்கு
இதுவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இதையொட்டி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் ஜூன் மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கி ஜூலையில் 200க்கும் கீழ் சரிந்தன. இருப்பினும் மூன்று இலக்க எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்களுடன் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 19) காலை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
என்னென்ன சேவைகள் கிடைக்காது?
அதன்படி, காய்கறி, பால், மளிகை
ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். தியேட்டர்கள், பூங்காக்கள், மால்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஆட்சியரின் உத்தரவிற்கு பொதுமக்கள் அனைவரும் உரிய ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் நேற்று புதிதாக 203 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் பலியாகி இருக்கின்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று 7,250 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மாநிலம் முழுவதும் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment