உதயநிதிக்கு புதிய பதவி; சபாநாயகர் அப்பாவு சர்ப்ரைஸ் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

உதயநிதிக்கு புதிய பதவி; சபாநாயகர் அப்பாவு சர்ப்ரைஸ் அறிவிப்பு!

உதயநிதிக்கு புதிய பதவி; சபாநாயகர் அப்பாவு சர்ப்ரைஸ் அறிவிப்பு!

திமுக இளைஞரணிச் செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறை களமிறங்கினார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார். இதையடுத்து தனது தொகுதியில் நாள்தோறும் ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இவரது சுறுசுறுப்பான செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் பிற கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கும் சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இவர் தினசரி செய்திகளில் வராத நாளே இல்லை என்று கூறலாம்.

பம்பரமாய் சுழலும் உதயநிதி

கொங்கு மண்டலத்தில் திமுக போதிய செல்வாக்கு பெற்றிராத நிலையில், அந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்த திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில் சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு வருகிறார். தமிழக சட்டமன்றத்தில் உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இருக்கைக்கு பின்னால் மிக அருகிலேயே இடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் சில மூத்த எம்.எல்.ஏக்கள்,

உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு

உதயநிதி ஸ்டாலினின் இருக்கைக்கு அருகில் வந்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு திமுகவில் செல்வாக்கு பெற்ற நபராக உயர்ந்து வருகிறார். இவருக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் வேறொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று அறிவித்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

இதில் எம்.எல்.ஏக்களும் நியமிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல் சென்னை பல்கலைக்கழகத்திற்கு வெற்றியழகன், வி.ஜே.ராஜேந்திரன், ஜோசப் சாமுவேல், ஐட்ரின் மூர்த்தி, செந்தில் குமார், மரகதம் குமரவேல் ஆகியோர் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு சிந்தனைச் செல்வன், கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு ஜவாஹிருல்லா, வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வேல்முருகன், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு ஈஸ்வரன் மற்றும் கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு மணிகண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது பதவி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad