மீண்டு எழும் தமிழர் வரலாறு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

மீண்டு எழும் தமிழர் வரலாறு!

மீண்டு எழும் தமிழர் வரலாறு!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கண் டறியப்பட்டு வருகின்றன. தற்போது சாத்தூர் வைப்பாறு அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் மேடு கண்டறியப்பட்டுள்ளது.

சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு நினைவுக் கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் பா.ரவிச்சந்திரனின் தொல்லியல் ஆய்வில் தெரியவந்த விவரங்கள் வியப்பூட்டுகின்றன.
சாத்தூர் பகுதியானது பண்டைக்காலம் தொட்டே சாத்தனூர் என்றே அழைக்கப்பட்டுவந்துள்ளது என்பதை முற்காலப் பாண்டிய வேந்தன், மாற வல்லபனின் காலத்தைச் சேர்ந்த கி.பி . 823ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டில் “இருன்சோ நாட்டுச் சாத்தனூர்” என்ற பெயர் காணப்படுவதிலிருந்து இவ்வூரின் தொன்மையை அறிய முடியும்.

இப்பகுதியில் சங்க காலம் முதல் மக்கள் வாழ்ந்த தடயங்களான தொல்லியல் மேடுகள், முதுமக்கள் தாழிகள், கல்வெட்டுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன.

அண்மையில், சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்துக்கு அருகில் வைப்பாற்றுக்கு தெற்கே உயரமான, தொல்லியல் மேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொல்லியல் மேட்டின் ஊடாக ரயில்வே பாதை செல்கிறது.

இப்பகுதியில் சிதிலமடைந்த பானை ஓடுகள் இருந்த இடத்தைக் களஆய்வு செய்தபோது பழங்கால மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள், குறுகிய துளை யுடைய நீர்க்குடுவை, மண்ஜாடி மூடியின் கொண்டைப்பகுதி, சங்கு அறுத்து செய்த வளையல்கள், அதற்குப் பயன்படுத்திய சங்குகள், வட்டச் சில்லுகள், பலவண்ணக் கற்பாசிகள், ஒளி ஊடுருவாத கருப்பு நிறக் கண்ணாடி வளையல்கள், பிற்காலத்திய நாயக்கர் காலச் செப்புக் காசு ஆகியன கிடைத்துள்ளன.
1.7 மீட்டர் அளவு விட்டமுடைய உறைகிணறு ஒன்றும் அண்மையில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

பழைய கற்காலத்தின் இறுதிக் காலமான நுண்கருவிக் காலம் தொடங்கி, பெருங்கற்காலமான சங்க காலம் கடந்து, பிற்கால பானை ஓடுகள் வரை தடயங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ச்சியாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டிய பகுதிக்கும், ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழ்வாராய்ச்சி பகுதிக்கும் செல்ல நேரிட்டது. கொடுமணல் மற்றும் இங்குள்ள அரச்சலூரில் இசை சார்ந்த பல அகழ்வாராய்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் வாழ்ந்த திங்களூர் இங்கேதான் உள்ளது. இங்கிருந்து நொய்யலாற்றில் பரிசல், சிறு படகுகள் மூலம் பொருட்களை ரோமாபுரிக்கு அப்போதே அனுப்பியது பெரும் வியப்பைத் தந்தது.

இது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று தொடர்புடையது. கொடுமணல் நாகரிகம் அல்லது நொய்யலாற்று நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பகுதி எப்படி அழிவுக்கு உள்ளானது, இதனுடைய உண்மை வரலாறு என்ன என்பது இன்னும் வெளிவரவில்லை.

இங்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ தொல்லியல் ஆய்வு அமைப்பான இந்திய தொல்லியல் ஆய்வகம் தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளது.

கொடுமணல் பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய எடுத்திருக்கும் பகுதி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த இடம் கல்லறைப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வுகளின்போது கல்லறைகள், சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஹெக்டேர் பரப்பளவில் கற்கால குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து 1985ஆம் ஆண்டு இங்கு முதல் ஆய்வினை நடத்தின. பின்னர் 1986, 1989,1990ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தின. இதில் 13 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 48 இடங்களில் தோண்டப்பட்டு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஒரு அகழாய்வு நடந்தது. அப்போது 15 அகழிகள் தோண்டப்பட்டன. இந்த அகழ்வாராய்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு கருதப்படுகிறது. ஒரே பகுதியில் 15 அகழிகள் தோண்டுவது என்பது மிகப்பெரிய விஷயம். இந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் கூட்டாக வாழ்ந்ததற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. காரணம் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளும் வெவ்வேறு விதமாக உள்ளன. இங்கு கிடைத்த பொருட்கள் கிமு 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தெரியவந்தது.

இரும்பு பொருட்கள், கல், கோமேதகம், விலையுயர்ந்த குண்டு மணிகளும் கிடைத்துள்ளன. ஆயிரக்கணக்கான வளையல்கள் கிடைத்துள்ளன. மாணிக்கக் கற்கள், ரத்தினம் உள்பட விலையுயர்ந்த கற்களும் கிடைத்துள்ளன. முழுமையான ஆராய்ச்சி கொடுமணலில் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த இந்த நிலையில் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் தொடங்கியிருக்கும் ஆய்வு முழுமையான வரலாற்றைக் கொண்டுவரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

அதே போலவே, வரலாற்றில் திருவில்லிப்புத்தூருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்த பகுதியை இராணி மல்லி என்பவர் ஆண்டார். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர். தமிழை ஆண்டாள், கோதை நாச்சியாருடைய திருத்தலம். ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கல்விச் சாலைகள், நூலகங்கள் சூழ்ந்த ஊர். திருப்பாவை என்ற தமிழ் இலக்கியத்தை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்த ஊர். பெரியாழ்வாரின் தீந்தமிழ் பாசுரங்கள் இன்றைக்கும் வியக்க வைக்கின்றது. இப்படி பல வரலாற்றுத் தரவுகளை திருவில்லிப்புத்தூருக்கு சொல்லிக்கொண்டே போகலாம்.

திருவில்லிப்புத்தூர் அருகேயுள்ள மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கிருஷ்ணன் கோவில் வட்டாரத்தில் உள்ள விழுப்பனூர் கிராமத்தில் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள் நிறையப் புதைந்துள்ளன. ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத் துறையை சார்ந்த உதவிப் பேராசிரியர் கந்தசாமியும், பேராசிரியர் திருப்பதி, பேராசிரியர் தங்க முனியான்டி, பேராசிரியர் முத்துகுமார் ஆகியோர் இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த பூமியில் காணப்பட்ட முதுமக்கள் தாழிகளின் தொடர்ச்சி பல இடங்களில் இந்த வட்டாரத்தில் உள்ளதாகத் தரவுகள் சொல்கின்றன. அதன்மீது கற்பாறைகளால் அடுக்கி மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான மூன்றுவித ஓடுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன.

ஏறத்தாழ 2 அங்குலம் கனப் பரிமாணத்தில் களிமண், செம்மண் முதுமக்கள் தாழிகள் தென்பட்டுள்ளன. இதில் வண்ணப் பூச்சும், பூ வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கற்கள் யாவும் கனம் அதிகமாகவும், அவை இரும்புத் தாது கலந்து சுட்ட மண்ணால் கலவைபடுத்தப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகளும் பூமியில் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் வடபுறமும், கீழ்மேலாகவும் ஒரு சிறு ஓடை உள்ளது. இந்தச் சிற்றோடையின் வடகரை மிகப் பழமையான சுவர் தடுப்புகளும் கொண்டுள்ளது. எனவே அங்கு கட்டுமானப் பணிகள் அந்த காலத்தில் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் இதுபோலப் பல இடங்களிலும் நடந்துவரும் அகழ்வாய்வுகள் தமிழின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. இவற்றின் விவரங்களைத் தொடர்ந்து அலசுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad