விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை இல்லை: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் அனுமதி கிடையாது.
ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இந்து அமைப்புகள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற போது பேசிய சட்டமன்ற பாஜக குழு தலைவர்
நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்தார். சில கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அனுமதி வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக விளக்கமளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாது என அரசு சொல்லவில்லை. ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உரிய வழிமுறைகளை பின்பற்றி சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் கொண்டாடலாம். அதற்கு எந்த தடையும் இல்லை என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்தர்.
No comments:
Post a Comment