தடுப்பூசியால் பலன் ஏற்பட்டுள்ளதா: ஆய்வு அளிக்கும் பதில்கள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

தடுப்பூசியால் பலன் ஏற்பட்டுள்ளதா: ஆய்வு அளிக்கும் பதில்கள்

தடுப்பூசியால் பலன் ஏற்பட்டுள்ளதா: ஆய்வு அளிக்கும் பதில்கள்

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் பலன் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் பலருக்கும் கேள்விகள் இருக்கின்றன. ஒரு சிலருக்குத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை இல்லாமலும் இருக்கிறது. இவர்கள் எல்லோருமே அண்மையில் வெளியாகி இருக்கும், கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

மருத்துவ ஆய்வு இதழான லேன்சன்டில் வெளியாகி இருக்கும் இந்த ஆய்வு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வைரஸ் பாதிப்பால், தீவிர நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு எனத் தெரிவிக்கிறது.

மேலும், நீள் கோவிட் எனப்படும் 28 நாட்கள் நீடிக்கக்கூடிய கொரோனா பாதிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பையும் தடுப்பூசி பாதியாகக் குறைப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சூழலில் இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளன. ஏனெனில், தடுப்பூசியால் என்ன பயன் எனப் பரவலாகக் கேட்கப்படும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.

முதல் விஷயம், லண்டனின் கிங்ஸ் கல்லூரி தலைமையில், லண்டன் பல்கலை கல்லூரி, ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட ஆய்வாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு, தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கொரோனா வந்தவர்கள் மத்தியில் நடத்தப்பட்டுள்ளது.

ஒரு முறை அல்லது இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்படுவதை பிரேக் த்ரு கோவிட் பாதிப்பு என்கின்றனர். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஸ்மார்ட்போன் செயலி மூலம் அளித்த தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கும்போது, தடுப்பூசி போட்டுக்கொள்வதால் என்ன பலன் என்று பலமாகவே கேட்கத் தோன்றும்,

உண்மைதான், தடுப்பூசி என்பது நூறு சதவீதம் பாதுகாப்பு அளிக்கக்கூடியது அல்ல. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வைரஸ் தாக்கலாம் என்பதையும் மருத்துவ உலகம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறது.

நிரூபணமான உண்மை

vaccine 1
ஆனால், தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் வைரஸ் தாக்கலாம் என்றாலும், அதன் பாதிப்பு அல்லது தீவிரம் குறைவாக இருக்கும் என்றே மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்திவருகின்றனர். ஏற்கனவே நன்கறியப்பட்ட இந்த உண்மையைத்தான் இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.

தடுப்பூசி, நோய் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை 70 சதவீதம் குறைப்பதாகவும், தீவிர நோய் பாதிப்பதை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது. நீள் கோவிட் பாதிப்பு உண்டாவதைப் பாதியாகக் குறைக்கிறது.

இவை எல்லாம் நம்பிக்கை அளிக்கும் தகவல்கள். ஆய்வில் பங்கேற்ற முதன்மை விஞ்ஞானி டாக்டர் கிலார் ஸ்டீவ்ஸ் கூறியுள்ளது போல, “தடுப்பூசியை மீறி பாதிப்பு ஏற்படலாம், ஆனால் தடுப்பூசியின் உண்மையான நோக்கமான உயிர் காப்பது, தீவிர பாதிப்பைக் குறைப்பது ஆகிய பலன்களை இது குறைத்துவிடவில்லை” என்பதை நாம் உணர வேண்டும்.

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கொரோனாவைத் தடுப்பதற்கான பரவலான நடவடிக்கைகள் கொண்ட செயல்பாட்டில் தடுப்பூசிகளும் முக்கிய அங்கம் வகிப்பதை இந்த ஆய்வு உணர்த்துவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

தடுப்பூசியை மீறி பாதிப்புக்குள்ளானவர்களில் அறிகுறிகள் இல்லாமல் இருந்தவர்கள் எண்ணிக்கை ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் 63 சதவீதமாகவும், இரு முறை ஊசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் 94 சதவீதமாகவும் இருந்துள்ளது. மேலும், நோய் அறிகுறிகளை உணர்ந்தவர்கள் மத்தியில்கூட அதன் தாக்கம், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைவிடக் குறைவாகவே இருந்துள்ளது.

தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலர் நோய் பாதிப்புக்குள்ளானாலும் இந்த எண்ணிக்கை ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் 0.5 சதவீதமாகவும், இரு முறை ஊசி போட்டுக்கொண்டவர்கள் மத்தியில் 0.2 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

அதே போல, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 60 வயதுக்கு மேலானவர்கள் மத்தியில் நோய் பாதிப்பு இடர் அதிகமாக உள்ளது. மேலும் நகரங்களில் உள்ளது போல மிக நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள் மத்தியில் பாதிப்பு அதிகமாக இருப்பதையும் ஆய்வு உணர்த்துகிறது.

அறிவியல் தரும் தீர்வு
science

ஆய்வு முடிவுகள் எதிர்பாராதவை அல்ல என்றும், பெருந்தொற்றுக் காலம் முழுவதும் அறியப்பட்ட தகவல்களையே இது உறுதிப்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் மத்தியில் தற்காப்பு, தடுப்பூசி நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக, தடுப்பூசி ஏன் அவசியம் என மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருவதை வலுப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது. இது உயிர் காக்கும் நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது.
இந்நிலையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம், தடுப்பூசிக்கு எதிராகக் கம்பு சுத்தி நிலைமையை மோசமாக்காமல் அறிவியலின் பக்கம் நிற்பதுதான். உருமாறிய டெல்டா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசி செயல்திறன் குறைந்ததாகச் சொல்லப்படுவதால் அதனால் பயனில்லை எனப் பேசுவது அர்த்தமற்றது மட்டும் அல்ல பொறுப்பற்றதும்தான்.

அதே நேரத்தில் அரசு தரப்பிலும், தடுப்பூசி நடவடிகைகள் தீவிரமாக்கப்பட வேண்டும். மற்ற தற்காப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக்க வேண்டும்.

பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான சந்தேகங்கள் மறைந்து, அதற்கான ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிப்பது அரசை நிர்பந்திப்பதாகவும் அமையும்.

எனவே, தடுப்பூசியை நம்புவோம். தொடர்ந்து முகக்கவசம் அணிவோம். கொரோனாவை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடுவோம்.

No comments:

Post a Comment

Post Top Ad