முதல்வரின் தனிப்பிரிவு; தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து முதல்வரின் தனிப்பிரிவிற்கு வரும் மனுக்கள் மீது அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் விரைவாக பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை அறிந்த மக்கள், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புகார் மனு அளிக்க வருகின்றனர். இதற்கான அலுவலகம் சென்னை தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இலவச வீடு ஒதுக்கக் கோரி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்துச் செல்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் கூடும் பொதுமக்கள்
அதில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் முகக்கவசம் அணியாமலும், போதிய சரீர இடைவெளியை பின்பற்ற முடியாமலும் இருப்பது அவ்வப்போது தெரியவருகிறது. இவ்வாறு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால்
கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா இரண்டாவது அலை பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் கோரிக்கை மனுக்கள்
தினசரி தொற்று 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது. விரைவில் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த சூழலில் புதிதாக ஓர் அலைக்கு வித்திடும் வகையில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க கூட்டம் கூடினால் சரியாக இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதினார். இதையடுத்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் முதல்வரின்
தனிப்பிரிவிற்கு பொதுமக்கள் இணையதளம் வாயிலாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று
தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு
ஏற்கனவே முதல்வரின் தனிப்பிரிவிற்கு நேரடியாக மனுக்கள் பெறப்படுவதுடன், தபால் மற்றும் இணையதளம் (www.cmcell.tn.gov.in) மற்றும் முதல்வரின் உதவி மையம் (cmhelpline.tnega.org) ஆகியவற்றின் மூலமாகவும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த மனுக்கள் பெறப்பட்டதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறது.
No comments:
Post a Comment