இந்தியாவிலும் தாலிபான்கள்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 5, 2021

இந்தியாவிலும் தாலிபான்கள்?

இந்தியாவிலும் தாலிபான்கள்?

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி அமையவிருக்கும் நிலையில் உலகின் பல நாடுகள் அச்சத்துடனும் பதற்றத்துடனும் ஆப்கான் நிகழ்வுகளைக் கவனித்துவருகின்றன. அச்சம், அங்குள்ள மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பானது.
ஷரியத் சட்டப்படிதான் தங்கள் ஆட்சி இருக்கும் என்று தாலிபான்கள் தெளிவாக அறிவித்துவிட்டார்கள். எனவே ஆட்சியில் பெண்களுக்கு எந்தப் பங்கும் இருக்காது என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். பெண்கள் படிப்பதற்குக் கட்டுப்பாடுகள், பெண்கள் வேலைக்குச் செல்வதற்குத் தடை முதலான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். இவற்றையெல்லாம் நினைத்து அங்குள்ள பெண்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

காமசூத்திரத்தை எரிக்கும் பஜ்ரங் தள்

bajrang dal
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க, இந்தியாவிலும் அதே தாலிபான் அணுகுமுறையைச் சிலர் கைக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. குஜராத் தலைநகர் அகமதாபாதில் உள்ள புத்தகக் கடை ஒன்றின் முன் காமசூத்திரம் என்ற நூலின் நகலை பஜ்ரங் தள் தொண்டர்கள் எரித்ததாகச் செய்தி வந்திருக்கிறது.

காமசூத்திர நூலில் இந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய பஜ்ரங்தள் உறுப்பினர்கள், அதன் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். மேலும் புத்தக விற்பனை தொடர்ந்தால், அடுத்த முறை கடையும் எரிக்கப்படும் என பஜ்ரங்தள் உறுப்பினர்கள் கடை உரிமையாளரை மிரட்டியதாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன. இந்து தெய்வங்களை மோசமான நிலையில் காண்பித்திருப்பது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் இந்தியாவின் வளமான மரபைப் பற்றியும் பெருமையாகப் பேசும் இந்துத்துவ அமைப்புகள் இந்திய மரபின் சிறந்த அம்சங்களில் ஒன்றான காமசூத்திரம் என்னும் நூலைப் பற்றி இத்தகைய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது உண்மையில் அதிர்ச்சி அளிக்க வேண்டும். ஆனால், பஜ்ரங் தள் அமைப்பினர் நூல் நயம் அறிந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் ஏதுமற்ற நிலையில் வேதனை கலந்த கசப்புப் புன்னகையையே இந்த நிகழ்வு ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் மரபுச் செல்வம்

ks 3
வாத்ஸ்யாயனர் என்பவர் எழுதியதாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் காமசூத்திரம் நூல் எப்போது எழுதப்பட்டது என்பது குறித்துத் தெளிவான தரவுகள் ஏதும் இல்லை. ஆய்வாளர்கள் அது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிறிஸ்து பிறந்த பின் 225 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இரண்டாயிரம் ஆண்டுப் பழமை கொண்ட பிரதி இது. உலகம் முழுவதிலும் பல்வேறு அறிஞர்கள் பாராட்டிய நூல் இது. உலகின் பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூல் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக பஜ்ரங் தள் அமைப்பு கண்டுபிடித்துள்ளது. எந்தக் கட்சியையோ அமைப்பையோ சாராத இந்து ஒருவரும் இதைப் படித்துவிட்டுத் தன் மனம் புண்படுகிறது என்று இதுவரை சொன்னதில்லை. ஆனால், என்று பஜ்ரங் தள் கூறுகிறது. யார் அந்த இந்து என்று தெரியவில்லை.
காமசூத்திரம் காமத்தை ஓர் அறிவுத் துறையாக அணுகும் நூல். கிளுகிளுப்புக்காகக் காமத்தைக் கையாண்டு வணிகச் சரக்காக மாற்றுவதற்கும் காமத்தை அறிவுத் துறையாக அணுகுவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் அறிந்தவர்களின் எதிர்ப்பாக பஜ்ரங் தள்ளின் நடவடிக்கை தெரியவில்லை. உணர்வுகளைச் சுரண்டும் மலினமான காம நூல்களைப் படித்திருக்கக்கூடியவர்கள் காமசூத்திரத்தையும் அத்தகைய நூல் என்று நம்பிப் படித்தால் ஏமாந்து போவார்கள். காமம் குறித்த விழிப்புணர்வை ஊட்டக்கூடிய தகவல்களும் காமத்தை ஒரு கலையாகப் பயின்று அதன் அதிகபட்சப் பலன்களைப் பெற உதவும் ஆலோசனைகளும் இந்த நூலில் உள்ளன. காமத்தைப் பற்றி மட்டுமின்றி, வாழ்வியல் சார்ந்த பல்வேறு கூறுகளைப் பற்றியும் இந்த நூல் விரிவாகவும் நுணுக்கமாகவும் பேசுகிறது.

பஜ்ரங் தள் இதை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். இந்நூல் இந்தியப் புராணங்களுக்கே உரிய படைப்பூக்கத்துடன் சுவையான கதையின் வடிவில் உள்ளது. சிவபெருமான் பார்வதியுடன் காமம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். அதனை நந்திதேவர் யதேச்சையாகக் கேட்டுவிடுகிறார். சிவனின் பேச்சில் இருந்த அம்சங்கள் அவருக்கு வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகின்றன. தான் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் என்று நந்திதேவர் சிவபெருமானின் பேச்சை ஓராயிரம் அத்தியாங்களாக எழுதுகிறார். இதுவே காமசூத்திரம் உருவானது குறித்த தொன்மக் கதை. காதல், பாலியல் கல்வி, வாழ்வியல் மதிப்பீடுகள் முதலிய பலவும் இந்த நூலில் உள்ளன.

காமம் என்பதை அசிங்கமான சங்கதியாகப் பார்ப்பதே பிற்போக்குத்தனம். இந்திய மரபு காமத்தை வெளிப்படையாக விவாதித்திருக்கிறது என்பது அந்த மரபு குறித்து நாம் பெருமை கொள்வதற்கான காரணங்களில் ஒன்று. நவீன அறிவியல் பார்வை காமத்தை ஓர் அறிவுத் துறையாக அணுகுவதைப் போன்றே வாத்யாயனரும் அணுகுகிறார். காமம் குறித்த முறையான அறிவை ஏற்படுத்துவதே இந்த நூலின் நோக்கம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூல் நவீன அறிவியல் வெளிச்சத்திலும் தன்னுடைய வலுவை இழந்துவிடவில்லை என்பது இதன் பெருமைகளில் ஒன்று.

பஜ்ரங் தள்ளின் தாலிபான் முகம்

bajrang
ஆனால், சிவபெருமான் காமத்தைப் பற்றிப் பேசினார் என்பது இந்துக்களைப் புண்படுத்துகிறது என்கிறது பஜ்ரங் தள். பெண்கள் வேலைக்குச் செல்வதும் பெண்கள் கல்வி கற்பதும் இஸ்லாத்திற்கு முரணானது என்று தாலிபான்கள் சொல்வதற்கும் இதற்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. தாலிபான்களாவது அவர்களுடைய மத நூல்களில் உள்ள கட்டளைகளின்படி, அவற்றில் உள்ள மதிப்பீடுக்ளின் அடிப்படையில் பேசுகிறார்கள். பஜ்ரங் தள் காமசூத்திரம் இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று சொல்வதற்கு இந்திய மரபில் எங்குமே ஆதாரம் இல்லை. எது இந்துக்களைப் புண்படுத்தும், எது இந்துக்களைப் பெருமைப்படுத்தும் என்பதை வரையறுக்கும் உரிமையை பஜ்ரங் தள் எடுத்துக்கொண்டிருக்கிறது. மத நூல்களின் அடிப்படையில் பழமைவாதம் பேசும் தாலிபான்களின் போக்கைக் காட்டிலும் இது ஆபத்தானது.

அகமதாபாதில் நடந்ததை விதிவிலக்கான தனி நிகழ்வாக ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் பஜ்ரங் தள் என்பது தனி அமைப்பல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.ஸின் குடையின் கீழ் இருக்கும் பல்வேறு இந்து அமைப்புகளில் ஒன்று. இந்த நாட்டை ஆளும் பாஜகவுடன் அதற்குக் கொள்கை சார்ந்தும் அரசியல் நடவடிக்கைகள் சார்ந்தும் நெருங்கிய உறவு உண்டு. இன்று பஜ்ரங் தள் சொல்வது நாளை பாஜகவின் குரலாக வெளிப்படலாம் என்பதால் இதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

காஷ்மீர் முஸ்லிம்களும் தாலிபான்களும்

taliban
காஷ்மீர் முஸ்லிம்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்போம் என்று தாலிபான்கள் அண்மையில் அறிவித்தார்கள். இந்திய முஸ்லிம்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஒன்றிய அரசின் சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் தாலிபான்களுக்குப் பொருத்தமான பதிலடி கொடுத்தார். "இந்திய முஸ்லிம்களை விட்டுவிடுங்கள் என்று தாலிபான்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்திய மசூதிகளில் துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகளால் யாரும் கொல்லப்படுவது கிடையாது. மாணவிகள் பள்ளிக்குச் செல்வதை யாரும் தடுப்பதில்லை. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தியாவில் ஆட்சி நடத்தப்படுகிறது" என்று முக்தர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

சரியான பதிலடி இது. ஆனால், இந்திய மரபுச் செல்வங்களில் ஒன்றான காமசூத்திரத்திற்கு எதிரான வன்முறைக் குரல் குஜராத் தலைநகரில் எழுந்தது குறித்து முக்தர் அப்பாஸோ இதர பாஜக தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை. தாலிபான் என்பது ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமைப்பாக இருக்கலாம். ஆனால், தாலிபானிசம் என்பது உலகம் முழுவதிலும் நிலவும் அடிப்படைவாதத்தின் அடையாளம். அதன் இந்திய முகமாக இந்துத்துவ அமைப்புகளின் ஒரு பிரிவினர் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்கள். பத்மாவதி என்னும் படத்தை எடுத்ததற்காக அதன் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் தலையைச் சீவ வேண்டும் என்றும் அதில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர்கள் இவர்கள். காதலர் தினத்தன்று அன்பைப் பரிமாறிக்கொள்பவர்களை அடித்து விரட்டியவர்கள் இவர்கள்.

இதுபோன்ற அதிரடி இந்துத்துவக் குரல்களைக் கண்டும் காணாமலும் இருப்பது இந்துத்துவ அமைப்புகளின் தலைமைக்குப் பழக்கம்தான். இந்த மௌனம் இதுபோன்ற செயல்கள் தொடர ஊக்குவிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் எதுவும் தேவையில்லை.

காமசூத்திரத்தை எதிர்க்கும் பஜ்ரங் தள அமைப்பினர் நாளை கஜுராஹோவில் உள்ள காமச் சித்தரிப்புகள் கொண்ட அற்புதமான கலைப் படைப்புகளை உடைக்க வேண்டும் என்று கிளம்பலாம். கோயில்களில் உள்ள பாலியல் சித்தரிப்புகளைத் தகர்க்க வேண்டும் என்று கிளம்பலாம். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலை தகர்த்து அழிக்கப்பட்டதுபோல இவர்களும் செயல்படலாம்.

அகமதாபாதில் நடந்திருப்பதை அரைவேக்காட்டுத்தனமான புரிதல் கொண்ட ஆர்வக்கோளாறு என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் இவர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்கள் இந்த நாட்டை ஆளும் கட்சி பயன்படுத்தும் சொல்லாடல்கள். இதுபோலப் பல நிகழ்வுகள் நடந்தபோது மௌனமாக இருந்த இந்துத்துவ அமைப்புகளின் தலைமை இதைக் கண்டிக்க வேண்டும். புரியாத, அறியாத விஷயங்களைப் பற்றிப் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையேல் இவர்கள் இந்தியத் தாலிபான்களாக வளர்ச்சி பெறுவதைத் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment

Post Top Ad