இவரெல்லாம் உயிரோடு இருக்கும்போது நான் எதுக்கு சாகணும்? - ஜோதிமணி ஆவேசம்!
பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற சீமானெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு
போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பா.ஜ.க.,வைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர ஜோதிமணி வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது:
கே.டி. ராகவன் பாலியல் குற்றத்தை நாங்கள் தட்டிக் கேட்டோம். பா.ஜ.க., பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதையும் அதன் தலைவராக இருக்கின்ற, அண்ணாமலை குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவோம் என்று சொன்னதையும் எதிர்த்து நாங்கள் போராடினோம். இதற்காக அண்ணாமலையிடம் இருந்தும், ராகவனிடம் இருந்தும் எந்த எதிர்வினையும் வரவில்லை.
ஆனால் மாறாக சீமானிடம் இருந்து எதிர்வினை வந்தது.
உலகத்தில் வேறு யாரும் செய்யாததையா ராகவன் செய்து விட்டார் என்று எந்தவித கூச்சமும் இல்லாமல், வெட்கமும் இல்லாமல், சீமான் பொது வெளியில் ராகவனின் பாலியல் குற்றச்சாட்டை ஆதரித்து இருந்தார். ஏன் சீமான் பாலியல் குற்றத்தை ஆதரிக்கிறார்?
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெறி கட்டுகிறது? அதனால் தான் நான் சீமானைப் பார்த்து கேட்டேன். உங்கள் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருப்பதால் அதற்கு பயந்து தான் நீங்கள் ராகவனின் பாலியல் குற்றச்சாட்டை ஆதரிக்கிறீர்களா? இல்லை பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் என்பதால் நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது.
சீமானிடம் எந்த தவறும் இல்லை என்றால் அவர் என் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.
நேர்மையாக நியாயமாக பதில் சொல்ல வேண்டியது தானே. அப்படி பதில் சொல்ல முடியாமல் ஏன் நீ விஷம் கொடுத்து சாவேன் என்று சொல்கிறார். இது தான் ஒரு கண்ணியமான அரசியலா? நான் எதுக்கு விஷம் குடித்து சாகணும்?
No comments:
Post a Comment