கந்து வட்டி கொடுமை கரூர் கலெக்டருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி தற்கொலை!
கரூரில் கடன் பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு பழைய இருசக்கர வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை.
கரூர் நகராட்சி சின்னாண்டான் கோவில் ரோடு பசுபதி லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி(55). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் கடந்த 15 வருடங்களாக வெங்கடாஜலபதி ஆட்டோ கன்சல்டிங் என்ற பெயரில் பழைய இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
தொழில் நன்றாகச் சென்ற நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தெரிந்தவர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அதிக அளவு கடன் பெற்று அதனைச் சமாளிக்க முடியாமலிருந்து வந்துள்ளார். தொழிலுக்காக வாங்கிய கடனுக்காகவும், வட்டிக்காகவும் பல லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
அசலுக்கு அதிகமாகப் பணம் கட்டிய பிறகும் கடன் கொடுத்த நபர்கள் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையிலேயே ரகுபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment