முதல்வர் ஸ்டாலினுக்கு சமூக நீதி வேந்தன் பட்டம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்
பனையூர் பாபு சட்டப்பேரவையில் இன்று தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “சமூக நீதியை நிலைநாட்டி வரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு உலகம் முழுக்கும் உள்ள தமிழக மக்கள் சார்பில் சமூக நீதி வேந்தன் என்ற பட்டம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “அயோத்திதாச பண்டிதர் அருகே மணிமண்டபம்
அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறேன் அதோடு அயோத்திதாசர் மணிமண்டபத்தை சென்னை கிண்டியில் அமைக்க வேண்டும். தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு அச்சரப்பாக்கத்தில் மணிமண்டபம் கட்டும் பணி துவக்க பணியிலேயே கிடப்பில் போடப்பட்டது. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்” என்றார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உள்ள சாதி அடையாளங்களை நீக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த எம்.எல்.ஏ. பாபு, “தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 20 சதவீத மக்கள் தொகை ஆதிதிராவிடர்கள். ஆனால் அவர்கள் தொழில் முனைவோர்கள்
ஆக மேம்பட வழங்கப்படும் தாட்கோ வங்கி கடன் தொகை ஆண்டுக்கு 150 முதல் 200 கோடி வரையான சொற்பத் தொகையே. எனவே இந்த கடன் வழங்கும் தொகையை அதிக படுத்தி ஆதிதிராவிட மக்கள் தொழில் முனைவோர்களாக மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட்டு அவற்றை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment