வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படும் விதம் சரிதானா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 6, 2021

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படும் விதம் சரிதானா?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படும் விதம் சரிதானா?


நாகரிக உலகின் மிகக் கொடுமையான இழிவுகளில் ஒன்று சாதி! பிறப்பின் அடிப்படையில் பிரித்து, ஒரு சாராரைக் கீழ்நிலையிலேயே வைத்திருப்பதை வேறெப்படிச் சொல்வது!

காலங்காலமாக இருந்த, இன்னும் தொடரும் சாதி இழிவைப் போக்க, ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனாலும், இது அழுக்கு ஊற்றாய் அவ்வப்போது பீறீட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

1955இன் குடிமை உரிமைப் பாதுகாப்புச் சட்டத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கான கூறுகளையும் உள்ளடக்கியிருந்தார்கள். பிறகு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களைப் பாதுகாக்க, 1989இல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரபட்டது.

இச்சட்டத்தில் 15 விதமான வன்கொடுமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்படி வனகொடுமையில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 5 வருடங்கள்வரை தணடனை என நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து குடிமை உரிமைப் பாதுகாப்புச் சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப்படியும் மேலும் 7 வன்கொடுமைகள் சேர்க்கப்பட்டு அதற்கு ஏழாண்டுகள் தண்டனை நிர்ணயிக்கப்பட்டது.

சட்டத்தின் மீதான விமர்சனம்
தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் நோக்கம். அதே நேரம், தாழ்த்தப்பட்ட மக்கள் பிற சாதியினரை மிரட்டிப் பணியவைக்க இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனமும் அவ்வப்போது எழுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் தொடர்ந்து இக்கருத்தை வற்புறுத்திவந்தனர். இந்தியாவின் பிற பகுதியிலும் இது போன்ற குரல்கள் எழுந்தன.

வன்கொடுமை சட்டப்படி, யாரேனும் புகார் கொடுத்தால், குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்காமலேயே வழக்குப் பதிந்து கைது செய்துவிடுவார்கள். பிணையில் விடுவதும் இல்லை. இந்நிலை மாற வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

“இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, அக்குழு புகாரை ஆராய்ந்து அனுமதி அளித்த பிறகே வழக்குப் பதிய வேண்டும்” என்ற கோரிக்கைள் எழுந்தன.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தில், 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆகஸ்ட் வரை மொத்தம் 57 இடங்களில் ஊர்வலங்கள் நடந்தன. இவற்றில் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

நீதிமன்றம் வெளியிட்ட கவலை

உச்ச நீதிமன்றமும் அண்மையில் இக்கருத்தை வெளிப்படுத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பணியிடங்களில் தவறு செய்யும் பணியாளர்களைக் கண்டித்தால் அவர்கள் தங்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் புகார் செய்து பழிவாங்கும் ஆபத்து நிலவுகிறது என அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு 2018, மார்ச் 20ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

அதில், “சாதியக் கோடுகளை அழிப்பதற்காகவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் சாதி வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. அதாவது, பொய்ப் புகார்களைப் பதிவு செய்வதற்காகவே இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்தச் சட்டம் சாதியை ஒழிப்பதற்குப் பதிலாகச் சாதியத்தை நிலைநிறுத்திவிடும். ஒரு சட்டம் அப்பாவிகளைச் சுரண்டவோ, பழிவாங்கவோ பயன்படுத்தக் கூடாது!” என்று கூறியது.

மேலும், “இந்தச் சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதை உணர முடிகிறது. ஆகவே, வன் கொடுமை புகார் வந்த உடனேயே, வழக்கு பதியக் கூடாது. முதல் கட்ட விசாரணை நடத்திய பிறகே வழக்கு தொடரப்பட வேண்டும். முன்பிணை பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்” என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தீர்ப்பும் அதற்கான எதிர்வினைகளும்
தமிழ்நாட்டில் திமுக, தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தன. வட மாநிலங்களிலும் போராட்டம் வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், “வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மைதான் என்று இதே வழக்கில் தெரிவித்த ஒன்றிய அரசு, திடீரென பல்டி அடித்துவிட்டது. சில கட்சிகள் போராடுவதைக் காரணம் காட்டித் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது” என்று சாடினார்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் சம்பவங்கள் நடக்கத்தான் செய்தன.

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தராக இருந்தவர் ஏ.கணபதி. இவர் மீது டாக்டர் லட்சுமி பிரபா என்பவர் வன்கொடுமை புகார் அளித்தார்.

அதில், “துணைவேந்தர் கணபதி என்னைத் தீண்டத்தகாதவராக கருதுகிறார்; பொதுவெளியில் அவமானப்படுத்துகிறார்” என்று தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், கணபதிக்கு எதிராகக் கோவை, வட வள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், துணைவேந்தர் கணபதியை வழக்கிலிருந்து விடுவித்தார். மேலும், “யாரையும் துன்புறத்த, பழிவாங்க, இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது தவறு. இது அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களுக்கு எதிரானது. சாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், இது பொன்ற பொய்ப் புகார்கள் சாதிய வெறுப்பை வளர்க்கவே உதவும்” என்றார்.

மிகச் சமீபத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததும் உண்டு.

கோவை மாவட்டம், ஒட்டர்பாளையத்தை சேர்ந்த விவசாயி கோபால்சாமி. இவர் தனது பரம்பரை நிலம், தனது குடும்பத்தார் ஒப்புதல் பெறாமல் வேறு ஒருவருக்குப் பட்டா மாறுதல் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ந்து, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு விசாரிக்கச் சென்றுள்ளார். அங்கு கிராம உதவியாளர் முத்துசாமியை அவர் தாக்கியதாகவும், காலில் விழ வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

இந்நிலையில் கிராம உதவியாளர் பட்டியல் இனத்தவர் என்பதால் தனது சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக கோபால்சாமி மீது காவல் துறையில் புகார் அளிக்க, கோபால்சாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், பின்னர் வெளியான முழு வீடியோவில் விவசாயி குற்றமற்றவர் என்பதும், கிராம உதவியாளர் முத்துசாமி, தான் செய்த தவறை மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, விவசாயி கோபால்சாமி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் டி.வேணு கோபால், “விவசாயி கோபால்சாமி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்ட நிலையிலும், அவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை. எங்களது போராட்டத்துக்குப் பிறகே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. தவறு செய்த கிராம நிர்வாக அதிகாரி, கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும் சில நிகழ்வுகள்…
சில நாட்களுக்கு முன் நடந்த இன்னொரு உதாரணம்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகில் காளிப்பட்டியில் செங்குளம் என்ற பெரிய குளம் உள்ளது. இங்கு முறைகேடாக மண் எடுக்கப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது, நீராதாரம் குறைகிறது எனப் போராடி வருபவர் ‘நேர்மை மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவர் பழ. ரகுபதி.

இதையடுத்து, இவர் உள்ளிட்ட மூவர் மீது, மண் அள்ளும் தரப்பினரின் தூண்டுதலில் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. பிறகு விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு அவ்வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

“சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் நான் இல்லை. தவிர தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் சேர்த்து எத்தனையோ சமூக போராட்டங்களில் நான் கலந்துகொண்டுள்ளேன். திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் படிக்கும் எனது இரு குழந்தைகளுக்கும், ‘சாதி இல்லை’ என்றே சான்றிதழ் பெற்று படிக்கவைக்கிறேன். இச்சான்றிதழுக்காக நான் நடத்திய சட்டப் போராட்டம் நீண்டது. இப்படிப்பட்ட என்மீது போலியாக வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டது. பிறகு திரும்பப்பெறப்பட்டது” பழ.ரகுபதி வேதனையுடன்.

இதே திருப்பூரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், பழ.கவுதமன். மதுக்கடை எதிர்ப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “என் உறவினர் ஒருவர் நிதி நிறுவனம் நடத்திவந்தார். இந்த நிலையில், ஒருவர், ‘உன் உறவினர் என்னை ஏமாற்றிவிட்டார். நீதான் பணம் தர வேண்டும்’ என்றார். காவல் துறையிலும் புகார் அளித்தார். எனக்கும், எனது உறவினருக்கும் பண ரீதியான தொடர்பில்லை என்பதை அறிந்த காவல் துறையினர் என்னை விடுவித்துவிட்டனர். பிறகு அந்த நபர், வேண்டுமென்றே, என் மீது வன்கொடுமைத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நபர் கேட்ட தொகையை வேறு வழியின்றி அளித்தேன். பிறகு வழக்கை வாபஸ் பெற்றார்” என்றார்.

தலித் அமைப்பு ஒன்றின் தலைவர் கருப்பையா, “வன்கொடுமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது தவறான பிரச்சாரம். பெரும்பாலான வழக்குகள் நிரூபிக்கப்படாமல் போவதற்குக் காரணம், காவல் துறை முறையாக விசாரிக்காததே. ஆதிக்கச் சாதி மற்றும் அரசியல் காரணமாக, ஒடுக்கப்பட்டவர்கள் தங்களது தரப்பினை நிரூபிக்க முடிவதில்லை. இதில் காவல் துறைதான் முனைந்து செயல்பட்டு, தரவுகளைத் திரட்டி உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வழக்கைக் கொண்டுசெல்ல வேண்டும். இது பெரும்பாலும் நடப்பதில்லை” என்கிறார்.

உண்மை என்னவென்றால், தாழ்த்தப்பட்டவர்கள், தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை வழக்காகப் பதிவு செய்யவே மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி உள்ளது என்றும் கருப்பையா கூறுகிறார்.

இது குறித்து ஆய்வு செய்துள்ள நீதிக்கான சபை என்ற அமைப்பைச் சேர்ந்த வல்ஜிபாய் படேல், “குஜராத் மாநிலத்தில் பதியப்பட்டுள்ள பல்வேறு வன்கொடுமை வழக்குகளில் காவல் துறையும், அரசு தரப்பும் போதுமான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை. இதுவே, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவதற்கான முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார் என்பதைக் கருப்பையா சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த ஆய்வு குஜராத் மாநிலத்தை வைத்து மட்டும் நடத்தப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும் இதே நிலைதான்! மிகச் சிலதான் பொய் வழக்குகளாக இருக்கக்கூடும். மற்றபடி உண்மையான வழக்குகளுக்கே நீதி கிடைக்கவில்லை!” என்கிறார் கருப்பையா.

“வன்கொடுமை சட்டத்தில் மிகச்சில வழக்குகளே பொய் வழக்குகள் என வைத்துக்கொண்டாலும், அது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தவறான புரிதலை பிறரிடம் ஏற்படுத்துமே. ஆகவே பொய் வழக்கு தொடுக்கக் கூடாது என தாழ்த்தப்பட்ட மக்களிடம் உங்களைப்போன்ற அமைப்பினர் பிரச்சாரம் செய்யலாமே!” என்றேன்.

“ஆதிக்கச் சாதியினர் இந்தச் சட்டமே தேவையில்லை என வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில், பொய் வழக்கு வேண்டாம் என பிரச்சாரம் செய்தால், ஆதிக்க சாதியினரின் வாதத்துக்கு வலு சேர்ப்பதாக ஆகிவிடும். பொய் வழக்கு எனத் தெரிந்தால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கட்டும். நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். ஆதரிப்போம்!” என்றார் கருப்பையா.

இதற்கிடையே, “நூறு குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம்.. ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதானே நமது நீதி முறை. அதனால்தானே குற்றம்சாட்டப்பவருக்குத் தங்கள் குற்றமற்ற நிலையை நிரூபிக்கச் சட்டத்தில் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தேவையா?’ என்ற குரல் வலுப்படுகிறது.

இதற்கு என்னதான் தீர்வு?
ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், பல்வேறு சமூக மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதில் பிரதமர் இந்திரா காந்தி முதல் பல பிரதமர்களோடு இணைந்து செயலாற்றிவருமான, மறைந்த பி.எஸ். கிருஷ்ணன் இது குறித்து ஒருமுறை கூறியது இவ்விஷயத்தில் மிகவும் முக்கியமானது.

“தாழ்த்தப்பட்ட மக்ற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை இன்னும் அடித்தளத்திலேயே இருக்கிறது. உதாரணமாக, ஒரு வயதுக்குள் மரணத்தைச் சந்திக்கிற குழந்தைகளில் இந்த குழந்தைகளே அதிகம்.
மக்கள் தொகையில் சிறுபான்மையாக இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள், விவசாயக் கூலித் தொழிலாளிகளின் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தவிர அவர்களின் சராசரி ஆயுட்காலம் மற்றவர்களைவிடக் குறைவாகத்தான் இருக்கிறது. ஆக, அவர்களைப் பாதுகாக்கும் சட்டம் தேவைதான்.

வன்கொடுமை வழக்குகளில் பலர் விடுவிக்கப்பட்டுவிடுவதால் அவை பொய் வழக்குகள் என்பது அர்த்தமற்றது. கொலை, கொள்ளை உள்ளிட்ட வேறு பல சட்டப் பிரிவின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளிலும் பலர் விடுவிக்கப்படுகிறார்கள். அதற்காக அந்தச் சட்டங்கள் தேவையில்லை என சொல்ல முடியுமா?” என்று கிருஷ்ணன் கூறியிருந்தார்.

பொய்யாகத் தொடுக்கப்பட்ட வன்கொடுமைச் சட்ட வழக்கினால் பாதிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பழ.ரகுபதியும் பழ.கவுதமனும்கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள். “இந்த வழக்கின் கீழ் எங்கள் மீது பொய்யாக வழக்கு பதியப்பட்டது. அதற்காக இந்தச் சட்டமே தேவையில்லை எனச் சொல்ல மாட்டோம். தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதைத்தான் சொல்வோம். காரணம், சில முறை இது தவறாகப் பயன்படுத்தப்பட்டால், உண்மையாகப் பயன்படுத்தப்படும்போதும் நம்பிக்கை அற்ற நிலை ஏற்படும்” என்கிறார்கள்.

ஏற்றத்தாழ்வுகளும் அதிகாரப் படிநிலைகளும் இறுக்கமாக நிலைபெற்றுள்ள நம் சமூகத்தில் இதுபோன்ற சட்டங்கள் அவசியமானவை என்பதில் ஐயமில்லை. ஆனால், இதைத் தவறாகப் பயபடுத்துவது இந்தச் சட்டத்தின் நோக்கையே சிதைத்துவிடுகிறது என்பதைத் தொடர்புடையோர் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிச் சிலர் தவறாகப் பயன்படுத்துவது, இதை நியாயமாகப் பயன்படுத்துபவர்களின் நிலையைப் பலவீனப்படுத்திவிடுகிறது என்பதை உணர வேண்டும்.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தும் விதம் ‘புலி வருது’ கதையாகிவிடக் கூடாது என்பதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டோரின் கவலை.

No comments:

Post a Comment

Post Top Ad