தவறி விழுந்த பெண் லாரி ஏற்றி பலி... மன்னார்குடியில் பெரும் சோகம்!
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார், சத்யா தம்பதியர் இன்று மன்னார்குடியில் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
மன்னார்குடி வஊசி சாலையில் சென்ற போது எதிரே லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இன்று காலை பெய்த மழையால் வஊசி
சாலை சர்ச் அக்ரகாரம் பகுதியில் பள்ளத்தில் மழை நீர் தேங்கி நின்றது.
பள்ளம் இருப்பதை அறியாத சிவக்குமார் மழை நீர் தேங்கி இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தைச் செலுத்திய போது பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி சத்தியா கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரியின் பின் சக்கரம் சத்தியாவின் தலை மீது ஏறியதில் சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி நகர போலீசார் சத்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் இதுபோன்ற சாலை விபத்துகள் ஏராளமாக நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சரி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment