சுத்துதே சுத்துதே பூமி.. அட கொஞ்சம் வேகமா சுத்துதாமே.. விஞ்ஞானிகள் வார்னிங்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 25, 2021

சுத்துதே சுத்துதே பூமி.. அட கொஞ்சம் வேகமா சுத்துதாமே.. விஞ்ஞானிகள் வார்னிங்!

சுத்துதே சுத்துதே பூமி.. அட கொஞ்சம் வேகமா சுத்துதாமே.. விஞ்ஞானிகள் வார்னிங்!


கடந்த 50 வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது பூமி வேகமாக சுற்றுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்
நமது பூமி வழக்கத்தை விட சற்று வேகமாக சுற்றுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வேகத்தை விட தற்போது வேகம் கூடியுள்ளதாம். இப்படியே போனால் நமது நேரத்தில் ஒரு நொடியைக் குறைக்க வேண்டி வரலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானா என்று கேட்போரும் உண்டு, அடேங்கப்பா 24 மணி நேரத்தைக் கழிக்க வேண்டுமா என்று கேட்கும் சோம்பேறிகளும் நம்மிடையே உண்டு. இந்த நிலையில் பூமி வேகமாக சுத்துவதாக இயற்பியலாளர்கள் கூறியுள்ளனர்.

இதேபோல பூமி வேகமாக சுற்றி வந்தால் நமது நேரத்தில் ஒரு நொடியைக் குறைக்க வேண்டி வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அட ஒரு நொடிதானே என்று உங்க மைன்ட் வாய்ஸ் கேட்பது நமக்கு கேட்கிறது.. நொடி ஒன்றுதான் என்றாலும் கூட அதனால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று இயற்பியலாளர்கள், கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் உள்ளிட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

நமது பூமி எப்போதிருந்து சுற்றத் தொடங்கியது தெரியுமா.. கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப் பெரிய பெரு வெடிப்பில் தோன்றியதுதான் நமது பூமி. அப்போது முதல் பூமி சுற்ற ஆரம்பித்து தொடர்ந்து சுற்றிக் கொண்டுள்ளது. சூரியனைச் சுற்றி வருவதோடு, தன்னைத் தானே சுற்றிக் கொள்ளக் கூடியது பூமி. இதனால்தான் பூமியில் இரவு பகல் ஏற்படுகிறது. பூமி சுற்றுவதை நிறுத்தி விட்டால் அதன் இயக்கமே ஒட்டுமொத்தமாக சீர்குலைந்து போய் விடும்.

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி, ஒருமுறை சூரியனை சுற்றி வரும் நேரத்தில், தன்னைத் தானே 420 முறை சுற்றிக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது 365 முறை என்ற அளவில் அது சுற்றி வருகிறது.


ஆனால் பூமியின் இந்த சுற்று வேகத்தில் அவ்வப்போது மாறுபாடுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வேகத்தை விட தற்போது அதிக வேகத்தில் பூமி சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதே வேகம் தொடர்ந்தால் நமது நேரத்தில் ஒரு நொடியை குறைக்க வேண்டி வரும் என்று சொல்கிறார்கள். பொதுவாக பூமி சுற்றும் வேகம் குறைந்தால் "லீப் செகன்ட்" அறிமுகப்படுத்தப்படும். அதாவது நமது நேரத்தில் ஒரு நொடியை அதிகரிப்பார்கள். "லீப் வருடம்" போல இது "லீப் நொடி". இந்த லீப் செகன்ட் 1972ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை அவர்கள் அமல்படுத்துகின்றனர். இதற்கு குறிப்பிட்ட காலவரையறை கிடையாது. கடைசியாக 2016ம் ஆண்டு இந்த லீப் செகன்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இது கொண்டு வரப்படவில்லை.

ஆனால் தற்போது பூமி வேகமாக சுற்றுவதாக தெரிய வந்துள்ளதால் லீப் செகன்ட்டுக்குப் பதில் "நெகட்டிவ் லீப் செகன்ட்".. அதாவது நொடியைக் குறைப்பது அமல்படுத்தப்பட வேண்டி வரும் என்று சொல்கிறார்கள். ஆனால் லீப் நொடியைப் போல , நெகட்டிவ் லீப் நொடியை அறிமுகப்படுத்துவது எளிதல்ல. பல சவால்களை நாம் அதில் சந்திக்க வேண்டி வரும் என்று சொல்கிறார்கள். தொலைத்தொடர்புத்துறை, அணு சக்தித் துறை, நேவிகேஷன் துறை, கம்ப்யூட்டர் துறை என சகல துறையினருக்கும் இந்த நெகட்டிவ் லீப் நொடி பெரும் தலைவலியைக் கொடுக்கக் கூடியது. இதை சமாளிக்க நாம் இன்னும் தயார் நிலையில் இல்லை என்பதுதான் இந்த தலைவலிக்குக் காரணம்.

ஆஹா.. இதைப் படிக்கும்போது நமக்கு இப்ப தலை சுத்துதேன்னு.. நீங்க நினைக்கலாம்.. தைரியமா இருங்க, பொறுத்திருந்து பார்க்கலாம்.. விஞ்ஞானிகள் பூமியின் வேகத்தை சமாளிக்க என்ன செய்யப் போறாங்கன்னு!

No comments:

Post a Comment

Post Top Ad