உதயநிதி தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுவாரா?
தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற வேண்டும்' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்.
` 234 தொகுதிகளுக்கும் சேவை செய்வதற்கான திறமை உதயநிதிக்கு உள்ளது என்பதெல்லாம் மிகைப்படுத்தி சொல்லப்படுவது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தபோது, ` இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி அமைச்சரவையில் இடம்பெறுவாரா?' என்ற கேள்வி எழுந்தது. ஆனால், `இது தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்தும்' என்பதால் அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.இதன்பிறகு, தனது தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை உதயநிதி மேற்கொண்டு வந்தார். `தமிழ்நாட்டில் உள்ள மற்ற தொகுதிகளைவிட உதயநிதி தொகுதிக்கு மட்டும் ஏன் இவ்வளவு உதவிகள் சென்று சேர்கின்றன?' என்ற சர்ச்சையும் எழுந்தது. இருப்பினும், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் சேப்பாக்கம் தொகுதியில் முகாமிட்டு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், `அமைச்சரவையில் உதயநிதி இடம் பெற வேண்டும்' என முதல் குரலாக ஒலித்திருக்கிறார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அன்பில் மகேஷ், ` 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு உதயநிதி உயர் பொறுப்புக்கு வர வேண்டும்' எனப் பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், ` அமைச்சர் பொறுப்புக்கு உதயநிதி வந்தால் தமிழ்நாட்டுக்கே பயனுள்ள வகையில் இருப்பார். அவரை சின்ன
வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். மக்களுக்காக உழைப்பது என வந்த பிறகு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனால் என்ன? என்னுடைய விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளேன். அவர் அமைச்சர் பதவிக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறோம்' என்றார்.
இதையடுத்து, ``உதயநிதியை அமைச்சராக்கும் முயற்சி நடக்கிறதா?'' என தி.மு.க நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தோம். ''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு அதற்கான பணிகள் வேகம் எடுக்கலாம். இப்போதே அதற்கான பேச்சை அன்பில் மகேஷ் உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. காரணம், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் யாரும் எதிர்க்கப் போவதில்லை. உதயநிதியும் அன்பில் மகேஷும் நண்பர்கள் என்பதால் கட்சி ரீதியாக ஒரு பேச்சை தொடங்கி வைத்துள்ளார். இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கும்'' என பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment