தடை இல்லைன்னா ரோட்ட போடுங்க: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 30, 2021

தடை இல்லைன்னா ரோட்ட போடுங்க: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தடை இல்லைன்னா ரோட்ட போடுங்க: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!


நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லாவிட்டால் சாலைப் பணிகளை முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை இல்லாவிட்டால், வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தை அணுகுவதற்கான சாலைப் பணிகளை முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயனாவரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன்கொல்லை, சிவன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்தே சென்னை - திருவள்ளுர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய நிலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


இதை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலமும், சுரங்கப் பாதையும் கட்ட 2010ஆம் ஆண்டு 30 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டு ரயில்வே துறையின் சார்பில் மேம்பாலப் பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த வழக்குகளில் விதிக்கப்பட்ட தடையால், மேம்பாலத்தை அணுகுவதற்கான சாலை அமைக்கும் பணிகள் முழுமை பெறாமல் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் இருந்த லெவல் கிராசிங்கும் அகற்றப்பட்டதால், அருகில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியோர், பெண்கள் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்கள் ரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டி உள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான பரபரப்பான மார்க்கத்தில் சில நேரங்களில் ரயில் மோதி இறப்புகளும் ஏற்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பெருமாள்பட்டு சாலையில் பாலம் தொடர்பான பணிகள் முடிவடைந்த நிலையில், மற்றொரு பகுதியில் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவற்றை விரைந்து முடித்து, பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி கடந்த ஜூலையில் தமிழக அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதன் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, உரிமையியல் நீதிமன்றத்தில் தடை உத்தரவுகள் ஏதும் இல்லை என்றால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடித்து, சாலைப்பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.



No comments:

Post a Comment

Post Top Ad