வேட்டைக்கு குறி வைக்கப்படும் மான்கள்: காப்பாற்றுமா வனத்துறை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 29, 2021

வேட்டைக்கு குறி வைக்கப்படும் மான்கள்: காப்பாற்றுமா வனத்துறை?

வேட்டைக்கு குறி வைக்கப்படும் மான்கள்: காப்பாற்றுமா வனத்துறை?





வட்டமலை அணையில் உயர்ந்த நீர்மட்டம். வேட்டைக்கு இலக்காகும் முயல் மற்றும் மான்கள். இதை ஆர்வத்துடம் அப்பகுதி வழியாக செல்பவர்கள் ரசித்து வருகின்றனர்.வட்டமலை கரை அணைக்கு 25 ஆண்டுகள் கடந்த பின் தற்போது பிஏபி வாய்க்கால் மூலம் நீர் வரத்து வந்து அணை முழுமையாக நிரம்பும் தருவாயில் உள்ளதால், கடந்த 25 ஆண்டுகளாக இதனை வசிப்பிடமாக கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட மான்கள், ஏராளமான முயல்கள் தண்ணீர் மட்டம் உயர்வு காரணமாக சாலைகளிலும், அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் சுற்றித் திரிவதால் எளிதாக வேட்டையாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தம பாளையத்தில் 700 ஏக்கர் பரப்பளவில், வட்டமலைகரை ஓடையை தடுத்து அணையானது 34.5 அடி உயரத்தில், 24.75 அடி தண்ணீர் தேங்கும் வகையில் கட்டப்பட்டது. மேலும் அணையில் 0.27 டி.எம்.சி இருப்பு வைக்கும் வகையிலும், 6043 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் இடது வலது கால்வாயுடன் கடந்த 1980 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 1980 முதல் 1991 வரை இரு முறை அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.அதன்பின் கடந்த 1996 க்கு பிறகு தண்ணீர் வரத்து இல்லாததால் அணை காய்ந்து போனது. இதன் காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக அணைக்கு தண்ணீர் வராததால்,சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. இதன் காரணமாக புதரும் முட்களும் நிறைந்து காணப்பட்டதால், மான்கள், காட்டுப் பன்றிகள்,முயல் மற்றும் காடை,கௌதாரி,மயில் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கும் இடமாக இருந்து வந்தது. அணையில் நீர் இன்றி இருக்கும் கோடைக் காலத்தில் அருகிலுள்ள விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகளில் மான்கள் மற்றும் இதர விலங்குகள் அங்கு மாடுகளுக்கு வைக்கப்படும் தொட்டிகளில் உள்ள தண்ணீரை அருந்தி உயிர் வாழ்ந்து வந்தன.


இந்த நிலையில் பி.ஏ.பி கால்வாயில் உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 28ம் தேதி கள்ளிபாளையம் மதகில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.அணைக்கு நான்கு நாட்கள் கடந்து டிசம்பர் 1 ஆம் தேதி மதியம் அணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. மேலும் கடந்த 25 நாட்களாக அணைக்கு நீர் வரத்து வந்ததை அடுத்து தற்போது அணையில் 22.75 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது.

நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து அணையில் வசித்து வந்த 50 க்கும் மேற்பட்ட மான்கள் இருப்பிடமின்றி அருகில் உள்ள செட்டிபாளையம்,காங்கேயன்பாளையம்,சுக்குட்டிபாளையம் உள்ளிட்ட அணையை ஒட்டி உள்ள விவசாய நிலங்களிலும், தென்னந்தோப்புகளிலும் அடைக்கலமாகி உள்ளன.மேலும் பகல் நேரத்தில் கிராமப்புற சாலைகளில் மான்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் எளிதில் அவை வேட்டையாடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளால் ஆடுகளை பாதுகாக்க வளர்க்கப்படும் பட்டி நாய்களால் கடிபட்டும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அணைப் பகுதியில் வசித்த அதிக எண்ணிக்கையிலான முயல்கள் தண்ணீர் மட்டம் அணையில் உயர்ந்த உடன் வெளியேறத் தொடங்கிய நிலையில், அவை வேட்டை காரர்களால் வேட்டையாடப் படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். மான்களை காக்கவும் முயல் வேட்டையை தடுக்கவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






No comments:

Post a Comment

Post Top Ad