ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, December 19, 2021

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!




ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் அவர்கள், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 42 மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்களக் கடற்படை அவர்கள் பயன்படுத்திய 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அண்மைக்காலங்களில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 42 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இராமேஸ்வரம் - இலங்கை இடையிலான குறுகிய கடல் பகுதியில் தவறுதலாக எல்லை தாண்டுவது இயல்பானது. இது இரு தரப்பிலும் நடக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad