ஓசூர் மேயர் சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு?... திமுகவின் மாஸ்டர் பிளான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

ஓசூர் மேயர் சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு?... திமுகவின் மாஸ்டர் பிளான்!

ஓசூர் மேயர் சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு?... திமுகவின் மாஸ்டர் பிளான்!


ஓசூர் மாநகராட்சி மேயர் பதவி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பர்கூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், நாகோஜனஅள்ளி ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஒசூரில் உள்ள 45 வார்டுகளில் 1,11,284 ஆண், 1,05,913 பெண் மற்றும் 95 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,17,292 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 26,910 ஆண், 28,520 பெண் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தமாக 55,421 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

நகராட்சியாக இருந்து 2019ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர், முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கிறது. இந்த மாநகராட்சி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒசூர் மாநகராட்சி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுவரை 14 சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்தித்துள்ள ஓசூர் சட்டமன்ற தொகுதியில் எட்டு முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஒரே முறை மட்டும் அதிமுக வெற்றி பெற்று பாலகிருஷ்ணரெட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவரும், வழக்கு ஒன்றில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பதவியை இழந்தார்.

அந்த இடத்திற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மனைவி ஜோதி களமிறங்க அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சத்யா அமோக வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் ஒசூர் திமுகவுக்கு சாதகமான தொகுதியாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக மூன்று இடங்களிலும், திமுக இரண்டு மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், ஒரு வகையில், அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் என பேசப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக மற்றும் கே.பி.முனுசாமியின் செல்வாக்கை குறைக்கும் வகையில் எப்படியாவது ஓசூர் மாநகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சியை கைப்பற்ற வேண்டும் என ஆளுங்கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது. இதனால், ஒசூரில் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்தால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என மூத்த நிர்வாகிகளிடம் கட்சித் தலைமை ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad