போக்குவரத்து துறைக்கு கோர்ட் கிரீன் சிக்னல்... டிரைவிங் ஸ்கூல்களுக்கு மீண்டும் செக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 27, 2022

போக்குவரத்து துறைக்கு கோர்ட் கிரீன் சிக்னல்... டிரைவிங் ஸ்கூல்களுக்கு மீண்டும் செக்!


போக்குவரத்து துறைக்கு கோர்ட் கிரீன் சிக்னல்... டிரைவிங் ஸ்கூல்களுக்கு மீண்டும் செக்!


ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றிவிட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என, 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த சுற்றறிக்கை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


அந்த மனுவில், '2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கில், போக்குவரத்து ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான அம்சங்களுடன் வாகனங்கள் தயாரிக்கப்படுவதால், ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களுக்கு அதுகுறித்து கற்பிக்க வேண்டியுள்ளதால் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் முடியாத இலகுரக வாகனங்களும், 10 ஆண்டுகள் முடியாத கனரக வாகனங்களையும் பயன்படுத்துவதற்கு தகுதியானவை என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும், அரசாணை பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் , அப்போது கொரோனா இல்லாத நிலையில் தற்போதைய சூழலை சாதகமாக்கி மனுத்தாக்கல் செய்துள்ளது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றும், காலம் கடந்த வாகனங்களை பயிற்சிக்காக அல்லாமல் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad