உ.பி., அரியணையை பிடிக்க கைகொடுக்குமா ஆன்லைன் பிரசாரம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, January 13, 2022

உ.பி., அரியணையை பிடிக்க கைகொடுக்குமா ஆன்லைன் பிரசாரம்?

உ.பி., அரியணையை பிடிக்க கைகொடுக்குமா ஆன்லைன் பிரசாரம்?



உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க அனைத்து கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன
உத்தரப்பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து விட்டால், கிட்டத்தட்ட, மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எழுதப்படாத விதி உள்ளதால், அங்கு ஆட்சி அதிகாரத்தில் அமர அனைத்து கட்சிகளும் இரவுப் பகலாக பணியாற்றி வருகின்றன.

இதில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு பெருகி வருகிறது. வரும் தேர்தலில் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்பார் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததாலேயே, அகிலேஷ் யாதவ் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த முறை, அவர் சூதானமாக காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது.

பாஜக அரசு மீது மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகவே கூறப்படுகிறது. குறிப்பாக, லக்கிம்பூர் கேரி விவகாரம் உள்ளிட்டவற்றில் பாஜக மீது விவசாயிகள் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஆனாலும், தேர்தல் கருத்துக்கணிப்புகள் சில பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கணித்துள்ளன. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சியை பெற்றாலும் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது கடினம் என்றும் கூறப்படுகிறது. நான்கு முனை போட்டி என்று கூறப்பட்டாலும், போட்டி என்னவோ, யோகி ஆதித்யநாத் - அகிலேஷ் யாதவ் இடையே தான் என அரசியல் நோக்கர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

உத்தரப்பிரதேச தேர்தலை பொறுத்தவரை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா காலம் என்பதால் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. குறிப்பாக, ஆன்லைனில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவுக்கு ஆன்லைன் தேர்தல் பிரசாரம் என்பது ஒரு பழக்கப்பட்ட விஷயமாகவே இருக்கிறது. 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு பெரிதும் உதவியது ஆன்லைன் பிரசார வியூகங்களே என்று கூறுகின்றனர் அரசியல் விவரம் அறிந்தவர்கள். இன்று வரை பாஜகவின் ஆன்லைன் செயல்பாடுகளையும், ஆன்லைனின் அக்கட்சி உக்கிரமாக செயல்படுவதையும் காண முடியும். பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், மான் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசுவது, மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மக்களிடம் பாஜக கச்சிதமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

ஆன்லைனில் சிறப்பாக செயல்படும் கட்சியாக பாஜக இருந்தாலும் கூட, யோகி ஆதித்யநாத் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மட்டுமே ஆர்வம் காட்டுகிறார். அரசை நடத்துவதற்கு அவர் ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உத்தரப்பிரதேச அரசு, அதிகாரிகளால் நடத்தக்கூடிய அரசாக மட்டுமே இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தக்கூடிய அரசாக இல்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது.அத்துடன், யோகியின் எதேச்சாதிகார அணுகுமுறை ஏற்கெனவே கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. யோகி ஆதித்யநாத் மீது அவரது சகாக்களே ஏராளமான குற்றாச்சாட்டை அடுக்குகின்றனர். மேலும், அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மோடிக்கு நெருக்கமான 1998 பேட்ச் குஜராத் கேடர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அர்விந்த் குமார் ஷர்மாவின் வரவுக்கு யோகியை ஆட்டம் காண செய்துள்ளது. இவரை துணை முதல்வராக்க மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்கு யோகி ஆதித்யநாத் முட்டுக்கட்டை போட்டதாக அம்மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உ.பி., மாநில பாஜக துணைத்தலைவரான இவர் மூலமே அரசு இயந்திரம் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன், தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், பாஜகவில் இருந்து பலர் விலகுவது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற, உட்கட்சி பிரச்சினைகளை அனைத்தையும் தேர்தல் பிரசாரத்துடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அக்கட்சிக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு பிரசாரம் செய்வது என்பது தெரிந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சியிடம் போதுமான வேகம் இல்லை என்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ராகுல் காந்தி போட்டால் அதை அனைவரும் ஆதரிக்கிறார்களா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, இதே பாஜகவில் நேர்-எதிராக இருக்கும். அக்கட்சி என்ன செய்தாலும் ஆன்லைனில் அதற்கு முட்டுக் கொடுக்க ஒரு பெருங்கூட்டமே இருக்கும். இதனால் ஆன்லைன் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியினரால் போதுமான அளவிற்கு செய்ய முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.சமாஜ்வாதி கட்சியை எடுத்துக்கொண்டால் அக்கட்சி மக்களிடம் மட்டுமே பேசி அதாவது நேரடியாக பேசி மட்டுமே பழக்கப்பட்ட கட்சி. பெரிய பெரிய பொதுக்கூட்டங்கள் மூலமாக மட்டுமே பொது மக்களின் ஆதரவைத் தேடி வந்துள்ளது. இதனால் ஆன்லைன் தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர்கள் தயாராக இல்லை என்பது தெரிய வருகிறது.

தமிழகத்தில் திமுக பேசிப் பேசி வளர்ந்த கட்சியாக இருந்தாலும் கூட தேர்தலுக்கு சில காலத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் தனது தேர்தல் பிரசாரத்தை மிகவும் வலுவாக எதிர்கொண்டது. இந்த நடவடிக்கையை சமாஜ்வாதி கட்சியை எடுக்கவில்லை என்பதுதான் களநிலவரம் ஆக உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் இந்த ஆன்லைன் பிரச்சாரத்திற்கு பரிச்சயமற்ற நபராகவே இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்துள்ள மாயாவதி அண்மைக்காலமாக தீவிரமாக செயல்படுவதில்லை. அவ்வப்போது அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். களத்தில் இறங்கி செயல்படாத வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அத்துடன், இந்த தேர்தலில் மாயாவதி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இது கூடுதல் பின்னடைவை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad