டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம்.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 8, 2022

டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம்.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம்.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!



டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏற்கெனவே சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.
டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி, உளவியல் ஆலோசனை, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி வருவதாக தமிழக பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


சென்னையை சேர்ந்த கே.இளங்கோ என்பவர், டிஸ்லெக்சியாவால் (dyslexia) பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கான நிபுணர் குழு அமைப்பதற்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்கக் கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என். செந்தில்குமார் ஆஜராகி, வாசித்தல், எழுதுதல், கற்றுக்கொள்தல் ஆகியவற்றில் ஏற்படும் சிரமத்தை குறிக்கும் டிஸ்லெக்சியா எனப்படும் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கி சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி, பள்ளி கல்வி ஆணையரகத்தின் சார்பில் இணை இயக்குநர் அமுதவல்லியின் பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், சம்க்ரா சிக்‌ஷா என்ற திட்டத்தின் அடிப்படையில் டிஸ்லெக்சியா குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலமாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும், பள்ளிகல்வித் துறையில் 2,398 சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும், இவர்கள் டிஸ்லெக்சியா உள்ளிட்ட 21 வகையான குறைபாடுடைய மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்லெக்சியா குறைபாட்டிற்கு சமூக ஊடகங்ளில் அடிமையாவது காரணமில்லை என்றும், சென்னை டிஸ்லெக்சியா சங்கம் சார்பில் அந்த குறைபாடு குறித்து 1 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை 346 மாணவர்கள் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு போக்குவரத்து செலவு, உதவியாளர் படி, ஊக்கத்தொகை ஆகியவற்றிற்காக மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு உள்ளதாகவும், சைபர் பாதுகாப்பு, அலைப்பேசி பயன்பாடு ஆகியவை குறித்தும் பயிற்சி அளிப்பதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவற்றை தற்போதைக்கு மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு, ஏற்கனவே அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது. அதேசமயம் அந்த நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்துவதை உறுதிசெய்யவும், கண்காணிக்கவும் வேண்டுமென அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad