கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் அதிரடி தளர்வுகள்: பின்னணி காரணங்கள் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 28, 2022

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் அதிரடி தளர்வுகள்: பின்னணி காரணங்கள் என்ன?

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் அதிரடி தளர்வுகள்: பின்னணி காரணங்கள் என்ன?


கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தமிழக அரசு பல்வேறு முக்கிய தளர்வுகளை அதிரடியாக அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்...ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கலன்னு சொல்லும் அளவுக்கு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அதிரடியாக தளர்த்தி உள்ளது.

குறிப்பாக வார நாட்களில் நடைமுறையில் இருந்த இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு இனி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டு பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், 1 -12 என அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதேபோன்று அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது.

வார இறுதி நாட்களில் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடைகளும் முற்றிலும் நீக்கப்பட்டு, வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கோயில்களுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்புகளுக்கு இவையெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1. கொரோனா மூன்றாவது அலை தமிழகத்தில் ஜனவரி மாத இறுதியில் உச்சத்தை அடைந்து அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்ற நிபுணர்களின் கருத்துபடி, கொரோனாவுக்கு இனி இறங்குமுகம். இதனை உறுதி செய்யும் விதமாக கடந்த இரண்டு நாட்களி்ல் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது

2. அரசின் புள்ளிவிவரங்களின்படி 15 -18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் பெரும்பாலாோருக்கு தடுப்பூசி செலுத்தி ஆகிவிட்டது. 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இயற்கையாக எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அத்துடன் என்னதான் ஆன்லைன் வகுப்புகள் என்றாலும், கடந்த இரண்டாண்டுகளாக நேரடி வகுப்புகள் சரிவர நடத்தப்படாததால் மாணவர்களின் கல்வி, கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகளை எவ்வளவு சீக்கிரம் திறக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திறக்க வேண்டும் என்பது பெருவாரியான பெற்றோரின் கருத்தாக இருந்து வருகிறது.
3. டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்து வைத்துவிட்டு, கொரோனா பரவி விடும்... கோயில்களுக்கு செல்ல வேண்டாம் என்று பக்தர்களை அறிவுறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்ப இனியும் வாய்ப்பளிததால் அது, விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுகவுக்கு பின்னடைவாக அமையலாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மூத்த அமைச்சர்கள், உடன்பிறப்பு யோசனை சொல்லி இருக்கலாம்.

4. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என அறிவித்தால், அதற்கு முதல் நாளான சனிக்கிழமை காய்கறி, மீன் மார்க்கெட்டில் மொத்தமாய் குவியும் மக்கள் கூட்டம், ஊரடங்கின் நோக்கத்தை சிதைத்துவிடுகிறது. இதனால் ஊரடங்கு எந்த அளவுக்கு பயனுள்ள உள்ளது என கேள்வி பல தரப்பிலும் எழுகிறது. அத்துடன் முழு ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறு, குறு வணிகர்கள் வேதனையுடன் அரசுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
5.இவையெல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின்போது அதன் தீவிரத்தை உணர்ந்து, அரசின் பொதுமுடக்க நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாதக்கணக்கில் ஒத்துழைப்பு அளிக்கதான் செய்தார்கள். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டு, தற்போது பூஸ்டர் டோஸும் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மறுபடியும் மொதல்ல இருந்தா? என கேட்கும்படி, மீண்டும் ஊரடங்கு தொடர்வதை வெகுஜென மக்கள் விரும்பவில்லை என தெரிகிறது. அத்துடன் மீண்டும, மீண்டும் லாக்டவுன் என்றால் பிறகு எதுக்கு தடுப்பூசி என்ற லாஜிக்கான கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் தொடர்ந்து லாக்டவுனை அமல்படுத்தினால், அது எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுகவுக்கு பின்னடைவாக அமையலாம் என்று அரசு கருதியிருக்கலாம்.




No comments:

Post a Comment

Post Top Ad