மத்திய பட்ஜெட்... செம கடுப்பான முதல்வர் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, February 1, 2022

மத்திய பட்ஜெட்... செம கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!

மத்திய பட்ஜெட்... செம கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!


மத்திய அரசின் பொது பட்ஜெட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் 2022 -23 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்து களை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கும் நடைமுறை வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த நடைமுறையை தொடர வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை புறக்கணித்திருப்பது ஒன்றிய -மாநில அரசுகளின் நல்லுறவுக்கு கை கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் பெரியண்ணன் மனபான்மையையே காட்டுகிறது.

“One Nation One Registration” என்று மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருப்பது எந்த அறிவிப்பினைச் செய்தாலும் மாநில உரிமைகளை எப்படிப் பறிப்பது என்பதை மட்டுமே ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு செயல்படுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

கோதாவரி – பெண்ணாறு - காவிரி நதிநீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும், அறிவிப்பினை செயல்படுத்த முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கூட பட்ஜெட்டில் காண முடியவில்லை என்பது கவலையளிக்கிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ராணுவ பெருவழித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால், இத்துறையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக்கூடாது என்ற எண்ணவோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.
தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கான புதிய ரெயில் திட்டங்களும் இல்லை, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை என ஒரு நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சுருக்கமாக சொன்னால், மக்களின் எதிர்பார்ப்பைப் புறக்கணித்து, மக்களைப் பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமாக இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad