தனித்துப் போட்டியிடக்கூடாது.. திருமாவளவன் அட்வைஸ்!
விசிக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனித்துப் போட்டியிடக்கூடாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் சீட் பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் தனித்துப் போட்டியிடக்கூடாது என்று என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உள்ளாட்சி தேர்தலுக்கு சீட் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. பிப்ரவரி 4ஆம் தேதி வேட்புமனுத்தாக்கலுக்கு கடைசி நாள். இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக டெல்லியில் இருக்கிறேன்.
தேர்தல் அரசியல் அவ்வளவு இலகுவானதல்ல. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு வருவது மட்டும் பொதுத்தொண்டு இல்லை. பொதுமக்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து அவர்களுக்கு இயன்ற வகையில் உதவிட வேண்டும்.சுற்றி இருப்பவர்கள் அத்தனை பேரும் எனக்கு நெருக்கமானவர்கள், விருப்பமானவர்கள்தான். யாரையும் ஒதுக்கிவிட முடியாது, ஆனால் வேட்பாளராக ஒருவரைத்தான் என்னால் தேர்வு செய்ய முடியும். ஒருவரை தேர்வு செய்தால் மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என கருதும் உளவியல் தேர்தல் களத்தில் உள்ளது. அதுவே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
எனவே, விரும்பியபடி இடம் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை எதிர்த்து தனியாக போட்டி மனுவை தாக்கல் செய்யக்கூடாது. வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கு, கட்சி வெற்றிபெறுவதற்கு, கட்சியை நம்பிக்கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment