மன உளைச்சலில் 100 மாணவிகள்... தமிழகத்தில் இப்படியும் ஒரு பள்ளி... இரவில் திக்திக் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 18, 2022

மன உளைச்சலில் 100 மாணவிகள்... தமிழகத்தில் இப்படியும் ஒரு பள்ளி... இரவில் திக்திக்

கல்வராயன்மலை உண்டி உறைவிடப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிக்கு திருநீர் வீசி பேய் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கொட்ட புத்தூர் அரசு மழைவாழ் உண்டி உறைவிடப் பள்ளியில் 350க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தனி விடுதி கட்டிடம் இல்லாததால் வகுப்பறையிலேயே தங்கி வருவதாக கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வரும் இந்த பள்ளியில் விடுதி காப்பாளர் , காவலாளி இல்லாமலும் அடிப்படை வசதிகளான தண்ணீர் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் இல்லாமலும் உள்ளதாம்.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை கட்டிடம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலையிலும் மாணவிகள் ஒரே நேரத்தில் நான்கு 5 பேர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சிறிய கழிப்பறை கட்டிடத்தில் தண்ணீர் வசதியும் இல்லை.
அருகாமையில் உள்ள பள்ளி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் வாலியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு சுமார் 20 அடி உயரமுள்ள கழிப்பறை கட்டிடத்திற்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பள்ளியில் தங்கியிருந்த மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாக தன்கையில் பிளேடால் அறுத்துக்கொண்டதில் ரத்தம் கொட்டி உள்ளது. இதனால் அந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட சகமாணவியும் மயங்கி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மேலும் இரு மாணவிகள் மயங்கி விழுந்தனர். இந்நிலையில் மாணவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்ததோடு எதையோ கண்டு மாணவிகள் பயந்து விட்டதாகவும் அருகிலுள்ள பேய் ஓட்டும் பூசாரி ஒருவரை அழைத்து வந்து வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு திருநீரை வீசி பேய் ஓட்டுவதாக செய்துள்ளனர்.

பனியன் கம்பெனிக்கு செல்லும் சிறுமிகள்... வயிற்றை நிரப்பும் கயவர்கள்... திருப்பூர் கொடுமை
இதனைத் தொடர்ந்து ஒன்பது மணிக்கு மேல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுந்த 4 மாணவிகளையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பரிசோதித்த மருத்துவர்கள் விஷத்தன்மையுள்ள உணவு காரணம் இல்லை எனவும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளனர் .இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த சார் ஆட்சியர் இளங்கோவன் மற்றும் கரியாலூர் காவல்துறையினர் மருத்துவர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவிகள் தங்களுக்கு போதிய கழிப்பறை கட்டிட வசதி இல்லாமல் இரவு நேரங்களில் கூட திறந்த வெளிக்கு செல்லும் அவல நிலை உள்ளதாகவும், தங்களுக்கு பெண் விடுதி காப்பாளர் மற்றும் மாணவிகளுக்கு தனி விடுதி கட்டிடம் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேல்நிலைப் பள்ளி வரை உள்ள இந்த பள்ளியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் தங்கள் உடல் உபாதையை கழிக்க போதிய பாதுகாப்பின்மை இருப்பதினாலும், இரவு நேரங்களில் அவர்களைப் பாதுகாக்க பெண் விடுதி காப்பாளர் இல்லாததாலும் பள்ளி மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் எனவும் துறை சார்ந்த அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பள்ளியை நிர்வாகிக்கும் பொறுப்பற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad