அணைகள் பாதுகாப்பு சட்டம்... திமுக எம்பி வழக்கை தள்ளுபடி செய்ய சொல்லும் மத்திய அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 10, 2022

அணைகள் பாதுகாப்பு சட்டம்... திமுக எம்பி வழக்கை தள்ளுபடி செய்ய சொல்லும் மத்திய அரசு!

அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படாது என மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு இயற்றியுள்ள 2021ஆம் ஆண்டின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி. ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கில், 'மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் மத்திய நீர்வளத் துறை துணை ஆணையர் ரவிநாத் சிங் தாக்கல் செய்த பதில் மனுவில், 'நாட்டில், 5 ஆயிரத்து 334 பெரிய அணைகள் உள்ளதாகவும், இதில், 227 அணைகள் நூறு ஆண்டுகளுக்கு மேலானவை என்றும், தற்போது 411 அணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்காணிப்பை உறுதி செய்யவும், அணைகளில் விபத்துக்களை தவிர்க்கவும், மக்கள் மற்றும் விலங்குகள், தாவரங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பொது நலத்துடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டதாகவும், 2006 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் அணைகள் பாதுகாப்பு சட்டம் இயற்ற முயன்ற போதும், அந்த மக்களவைகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால், 2021 ல் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது' என்று அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 'பெரும்பாலான அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்படுள்ளதாகவும், இந்த அணைகளின் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் முக்கியமானது என்பதாலும், ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எல்லையை தாண்டி அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்பதாலும், நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 டிசம்பர் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத்தின் கீழ், பெரிய அணைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய நதி நீர் ஆணையத்தின் மூலமாக மத்திய அணை பாதுகாப்பு அமைப்பும், அணை பாதுகாப்புக்கான மத்திய குழுவும் அமைக்கப்படும் எனவும், இந்த இரு அமைப்புகளும் அணைகளின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அணைகள் பாதுகாப்பிற்கான தேசிய குழுவின் அலுவர் சாரா தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் இருப்பார் என்றும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகள் கொடுக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து, அணை பாதுகாப்பு கொள்கை குறித்த ஒழுங்குமுறை விதிகளை பரிந்துரைப்பார்' என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அணைகளில் உள்ள நீரை திடீரென முழுமையாக வெளியேற்றுதாலும், அணை செயலிழப்பதாலும் மனிதர்களின் வாழ்விற்கும், உடைமைகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது' என்றும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'இந்த சட்டத்தின் மூலம் அணைகளின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் மற்றும் மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலேயே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைகள் மீதான உரிமை, இயக்கம் மற்றும் பராமரிப்பு, பயன்கள், நீரின் மீதான உரிமை என தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கும் ஏற்கெனவே உள்ள உரிமைகளில் மாற்றம் செய்யப்படாது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அணையின் உரிமை, செயல்பாடு மற்றும் பராமரிப்பு விவகாரங்களில் இந்த சட்டம் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்றும், இரு அமைப்புகளிலும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிட்டு, மாநில அதிகார வரம்பில் ஊடுருவி, சேதப்படுத்திவிடும் என்ற மனுதாரரின் அச்சம் தவறானது' என்றும் அந்த பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'அதனால் மாநில அரசின் அதிகாரத்தை பறித்துக் கொள்ளும் வகையில் இந்த சட்டம் உள்ளதாக மனுதாரர் தெரிவிக்கும் அச்சம் தேவையற்றது என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad