சென்னை மேயரின் பிறப்பு சான்றிதழ்: செக் செய்ய சொன்ன அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 13, 2022

சென்னை மேயரின் பிறப்பு சான்றிதழ்: செக் செய்ய சொன்ன அமைச்சர்!

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள பிரியாவின் மத சர்ச்சை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்

தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வடசென்னை பகுதியான திரு.வி.க.நகரிலுள்ள 74ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியா ராஜன் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றார்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவியை, 1957 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் முறையே தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய இரு பெண்கள் அலங்கரித்துள்ளனர். தற்போது மூன்றாவது பெண் மற்றும் முதல் பட்டியலின பெண் மேயராக பிரியா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, “சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள பிரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் ஆணையத்துக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார்” என தமிழக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அவர் பதவியை பறிக்கப் போவதாகவும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள பிரியாவின் மத சர்ச்சை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற 24ஆவது மெகா தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15-18 வயதுடைய சிறார்கள் 83.8 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுள்ள 8.55 லட்சம் பேரில் 6.81 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

ஜெயக்குமார் சிறையில் தனக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றம் செய்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவருக்கு சிறையில் சோஃபா, ஏசி எல்லாம் போட்டு கொடுக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, சென்னை மேயர் மதம் தொடர்பான பாஜக சந்தேகம் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சென்னை மேயர் பிரியா, பெரம்பூர் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி. அவர் கிறிஸ்தவரா, ஹிந்துவா என அவரின் பிறப்பு சான்றிதழ் வாங்கி பார்த்து பாஜக தெரிந்து கொள்ளட்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad