இயற்கைச்சூழலுக்கு இன்னொரு எதிரி பாசிக்கொல்லி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 17, 2022

இயற்கைச்சூழலுக்கு இன்னொரு எதிரி பாசிக்கொல்லி?

எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என்றிருப்பதில் தவறில்லை; அப்படிச் சுத்தப்படுத்துவதால் அகற்றப்படும் கழிவுகள் என்னவாகின்றன, என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்று சிந்தித்து நோக்குவது முக்கியம்
சில ஹோட்டல்களில் உணவருந்தும் மேஜைகளை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று அப்படியே துடைத்துத் தரையில் தள்ளுவார்கள். அந்த உணவுத் துண்டுகளும் தூள்களும் அப்படியே தரையில் சிதறிக் கிடக்கும். அதனை மிதித்தவாறே, சுத்தமான மேஜையின் மீது வைக்கப்பட்ட உணவை நாம் சாப்பிட்டுவோம். கொஞ்சம் வசதியான உணவகங்களில், சுத்தத்தின் அர்த்தம் புரிந்து மதிப்பளிக்கும் இடங்களில், இத்தகைய நிலை இருக்காது. சென்னை வடபழனி முருகன் கோயில் தெப்பக்குளத்தில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றுவதற்காகப் பாசிக்கொல்லிகளையும் இதர தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தவிருக்கும் தகவல், என்னுள் மேற்கண்ட உதாரணத்தையே நினைவூட்டியது.

எது சுத்தம்?

எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என்றிருப்பதில் தவறில்லை; அப்படிச் சுத்தப்படுத்துவதால் அகற்றப்படும் கழிவுகள் என்னவாகின்றன, என்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்று சிந்தித்து நோக்குவது முக்கியம்.

பூச்சிக்கொல்லிகளைப் பயிர்களில் தெளிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த புரிதல் இப்போது வளர்ந்திருக்கிறது. கொசுவைச் சாகடிப்பதற்கான சாதனத்தின் மீது கொசு அமர்ந்திருப்பதுபோல, இந்தப் பூச்சிக்கொல்லிகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலும் அவற்றில் பெருகியிருக்கிறது. இதனால் பயிரின் ஊட்டச்சத்து பாதிப்பதோடு, பூச்சிக்கொல்லிகளில் இருக்கும் சில நச்சுக்கள் நம் உடலையும் சுற்றுப்புறத்தையும் பாதிக்கின்றன. மண் வளம் அடியோடு நாசமாகிறது என்பது உட்படப் பல விஷயங்கள் தெரிந்த பிறகு, ‘ஆர்கானிக்’ உணவுகளுக்கு மாறிவிட்டது ‘எலைட்’ சமூகம். அந்த வசதியில்லாதவர்கள் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய நிலைமை.

பூச்சிக்கொல்லிகள் என்றில்லை, மரங்கள் வளர்வதைத் தடுப்பதற்கான வேதிப்பொருள் பயன்பாடு முதல் இயற்கையின் எந்தவொரு அங்கத்தையும் செயற்கையான முறையில் அகற்றும்போது அதன் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்குமென்பதைக் கடந்த காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. அந்த வகையிலேயே பாசிக்கொல்லி எனப்படும் ‘ஆல்கேசைடு’களையும் நோக்க வேண்டியிருக்கிறது.

முருகனுக்கு வந்த சோதனை!

தமிழர்களின் கடவுளாக அறியப்படும் முருகனை வணங்குபவர்கள் தென்மாநிலங்களில் அதிகம். கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவிலும்கூட முருக வழிபாடு எனும் கௌமாரம் பிரசித்தம். அறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முருக வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றுவர வேண்டுமென்பது சில குடும்பங்களில் இன்றும் பெரும் வேண்டுதலாக இருந்துவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அப்படியொரு வழிபாட்டுக்கு உறுதுணையாக இருப்பது வடபழனி முருகன் கோயில்.

வடபழனி முருகன் கோயில்
வடபழனி முருகன் கோயில்


இங்குள்ள தெப்பக்குளத்தில் அதிக அளவில் பாசிகள் வளர்ந்திருப்பதால், அவற்றைச் சுத்தம் செய்வதற்காக ‘பயோ அனெலெக்ஸ்’ என்ற திரவம் தெளிக்கப்படவிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ‘ஓசிஏட்டி’ எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாசி படராமல் இருக்கச் செய்யவுள்ளதாகவும் மார்ச் 9ஆம் தேதியன்று தினசரியொன்றில் செய்தி வெளியானது.
தெப்பக்குளத்தில் பாசியை அகற்றுவதில் தவறில்லை. ஆனால், காருண்யத்தைப் போதிக்கும் ஒரு கோயில் பரப்பில் பாசிக்கொல்லியைப் பயன்படுத்துவது எந்தளவுக்குச் சரியான அணுகுமுறை என்பதே கேள்வி. வெறுமனே ஆன்மிகரீதியாக மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார அடிப்படையிலும் கேள்விகளை எழுப்பக்கூடிய விவகாரம் இது. ஏனென்றால், என்னதான் உயிரி தொழில்நுட்பம் என்று கூவினாலும் அவற்றால் பிற உயிர்களுக்கு தீங்கு ஏற்படுமென்பதே நிதர்சனம். பாசிக்கொல்லிகள் தெளிப்பதால், அந்த நீரில் வளரும் மீன்களும் இதர முதுகெலும்பிலி உயிரினங்களும் மடிந்துபோகும் ஆபத்து உள்ளது. இது, என்னே முருகனுக்கு வந்த சோதனை என்றே வருத்தப்பட வைக்கிறது.

அழிக்கும் ஆற்றல்!

மழை பெய்து தேங்கிய நீர் தொடங்கி கிணறு, குளம், குட்டை, ஆறு, கடல் என்று எல்லா நீர்ப்பரப்புகளிலும் பாசிகள் வளர்வது இயல்பு. இவை மீன்களுக்கும் இதர நீர்வாழ் உயிரினங்களுக்கும் உணவாக அமைகின்றன. நீரில் ஆக்சிஜனேற்றத்தை தூண்டுவனவாக இருக்கின்றன. கோடை காலங்களில் பாசிகளின் மீது சூரிய ஒளி பட்டு ஏற்படும் வேதி மாற்றங்களால் உருவாகும் நாற்றத்தில் இதனை அறியலாம்.

தாவரங்கள் நிலத்தின் ஆக்சிஜன் சமநிலையை எந்தளவுக்கு சீர் செய்கிறதோ, அதையே பாசிகள் நீரில் மேற்கொள்கின்றன. இவற்றினால் மனித பயன்பாட்டுக்கு இடையூறு ஏற்படும்போது அகற்றுவதில் தவறில்லை. ஆனால், முழுவதுமாக அழிப்பதற்கான ஆற்றலைப் பயன்படுத்துவது எப்படிச் சரியாகும். அந்த நீர்ப்பரப்பில் இருக்கும் உயிரினங்களின் கதி என்னவாகும்?

பொதுவாக பாசிக்கொல்லிகளின் உள்ளடக்கத்தில் தாமிரப் பயன்பாடு தவறாமல் இடம்பெறுகிறது. இதன் அளவு மாறுபாட்டைப் பொறுத்தே பாசிக்கொல்லிகளின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. வெப்பநிலையில் வேறுபாடு, சூழலில் ஈரப்பதம், காற்றின் வேகம், திசை ஆகியவற்றைப் பொறுத்து பாசிக்கொல்லிகளால் கிடைக்கும் விளைவுகளும் மாறும். நீரில் இருக்கும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க, இதன் அளவைக் குறைக்கலாம் என்கின்றன சில இணையதளங்கள். அதாவது, அந்த அளவு அதிகமானால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதே இதன் பின்னிருக்கும் உண்மை. இது தவிர, சேகரிக்கப்படும் கழிவுகளை எந்த இடத்தில் வைப்பது என்பது உட்படப் பல கட்டுப்பாடுகள் இச்செயல்பாட்டில் அடங்கியிருக்கின்றன. பாசிக்கொல்லிகள் தெளிக்கப்படும் இடத்தின் அருகே மனித நடமாட்டம் இருக்க கூடாது என்பதும் அதிலொன்று.

மனிதர்களுக்கு பாதிப்பு!

பாசிக்கொல்லியைத் தெளிப்பவர்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் உடை, காலணி, தலைக்கவசம் அணிய வேண்டுமென்ற கட்டுப்பாடு அமெரிக்காவில் உள்ளது. சாப்பிடும்போதும், கழிவறைக்குச் செல்லும்போதும் கை, கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.சுத்தமான ஆடைகளை அதன் பின் அணிய வேண்டுமென்று பல விஷயங்கள் உள்ளன. இதை மீறி பாசிக்கொல்லிகள் நம் தோலிலோ, கண்ணிலோ, உடைகளிலோ பட்டால் அதன் விளைவுகள் நீண்டகாலத்திற்கு தொடரும் என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை இந்த பாசிக்கொல்லிகள் வாய் வழியாக உட்புகுந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். தோலில் அல்லது கண்ணில் பட்டால், சுமார் 15 – 20 நிமிடங்களுக்கு அவ்விடத்தை நீரினால் கழுவ வேண்டும். மனிதர்கள் மீது சிறிய அளவில் பட்டாலே இத்தகைய பாதிப்பு எனும்போது, நீர்வாழ் தாவரங்களும் பாசிகளும் சிதைவுக்கு உட்படும்போது எத்தகைய நிலை ஏற்படும் என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. காரத்தன்மை குறைவாக இருக்கும் நீரில் இந்த பாசிக்கொல்லிகளை தெளித்தால், அதன் தன்மையே முற்றிலுமாக மாறிப் போகும்.

பாசிக்கொல்லி தெளித்த பிறகு அந்நீரை அகற்றினாலும் கூட, நிலப்பரப்பில் இருக்கும் படிவங்களால் நிச்சயம் பின்விளைவுகள் தொடரும்.

மாற்று வழிகளை யோசிக்கலாமே!

மீன்கள், தவளைகள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இல்லாமல் ஒரு நீர்பரப்பில் உயிரோட்டம் இருக்காது. அதை மீறி தரைப்பரப்பு தெரிவது போல படிகமாய் ஒரு நீர்த்தேக்கம் இருந்தால், அதை ஒரு நொடி வேடிக்கை பார்க்கலாம். காட்சி நோக்கம் மட்டும் போதுமென்றால், தாராளமாக எவரும் பாசிக்கொல்லி உட்பட எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மேற்கண்ட தெப்பக்குளத்தைச் சுத்தப்படுத்தலாம். ஆனால், ஒரு கோயில் தெப்பக்குளம் அல்லது பொதுப் பயன்பாட்டுக்கு உள்ள நீர்நிலை என்பதையும் உங்கள் வீட்டு மீன் தொட்டி அல்ல என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

வடபழனியில் பயன்படுத்தப்படவிருக்கும் பயோ அனொலெக்ஸ் உள்ளடக்கம் குறித்தோ, ஓசிஏட்டி நுட்பத்தின் செயல்பாடு குறித்தோ இதுவரை விளக்கம் வெளியிடப்படவில்லை. கண்டிப்பாக அவற்றினால் 1% கூட பின்விளைவுகள் இராது என்றால் பின்பற்றலாம். ஆனால், அப்படியொரு கண்டுபிடிப்பு இதுவரை வரவில்லை என்பதே யதார்த்தம்.

இயற்கையாக பாசி அகற்றும் முறைகளால் சுற்றுச்சூழல் மேம்படுவதோடு, மனித பாதிப்பும் குறைவாகவே இருக்கும். முடிந்தவரை, நீரின் மேற்பரப்பில் இருக்கும் பாசிகளை வலைகள் கொண்டு அகற்றலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு பயன்படுத்துவதோ, பார்லி நாற்றுகள் பயன்படுத்துவதோ, பாசிப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. பின்விளைவுகள் மிகச்சிறிய அளவில் இருப்பதாக அறிந்தால், அது போன்ற முறைகளை முயற்சிக்கலாம்.

இதை இப்போது அழுத்தமாகச் சொல்ல வேண்டியது ஏன் என்று யோசிக்கலாம். வடபழனியில் பயன்படுத்தப்படும் இந்த நுட்பங்கள் இதர கோயில்களுக்கும் விரிவு செய்யப்படும் என்ற தகவலும் அந்தச் செய்தியில் அடங்கியிருக்கிறது. எப்போதோ தூவிய கருவேல விதைகளுக்கே இன்னும் விடிவுகாலம் தெரியாத நிலையில், இந்தப் பாசிக்கொல்லிகளால் இயற்கையின் எதிரிப் பட்டியல் மேலும் பெருக வேண்டுமா?!

No comments:

Post a Comment

Post Top Ad