பேசினாலே பரவுது! கொரோனா தொற்று - புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 27, 2021

பேசினாலே பரவுது! கொரோனா தொற்று - புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை...

பேசினாலே பரவுது! கொரோனா தொற்று - புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை...


கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தும்மினாலோ, இருமினாலோ, பேசினாலோ, அவரிடமிருந்து வெளியாகும் எச்சிலின் நுண் துகள்கள், காற்றில் 10 மீட்டர் வரை பரவும். அந்த காற்றை சுவாசிப்பவர்களும், எச்சில் துகள்கள் விழுந்த இடத்தை தொடுபவர்களும், வைரசால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரசின் முதல் அலை, கடந்த ஆண்டு பரவியது. அப்போது, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், 'கொரோனா வைரஸ், மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு எளிதாக தொற்றி விடுகிறது.





சமூக இடைவெளி

'ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை, மற்றொருவர் தொட்டு, முகத்தில் தேய்க்கும்போது, வைரஸ் பரவும்' என தெரிவிக்கப்பட்டது. அதனால், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; 6 அடி துாரம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்' என, சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியது. 







இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல், நாட்டில் கடந்த மார்ச் மாதம் அதிகரித்தது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாத பகுதிகளில், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொடர்பான சிகிச்சை பற்றியும், வைரசின் தன்மை பற்றியும், தங்கள் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அவ்வப்போது திருத்தம் செய்து வெளியிட்டு வருகிறது. 'பிளாஸ்மா சிகிச்சை முறையால், கொரோனா நோயாளிகளுக்கு பலனில்லை' என, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது. இதையடுத்து, கொரோனாவுக்கான சிகிச்சையில், பிளாஸ்மா சிகிச்சை முறையை நீக்கி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 17ல் உத்தரவிட்டது.







பல கட்டுப்பாடுகள்

இதன்பின், 'ரெம்டெசிவிர்' மருந்து குப்பிகளை, கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் பயன்படுத்த, பல கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சகம் விதித்தது. இந்நிலையில், கொரோனா பரவல் பற்றி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டி நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ், காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை, சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிய பின் அல்லது இருமிய பின், அவரது எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை சுவாசிப்பவர்களும், தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.





வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போது, இருமும் போது அல்லது பேசும் போது, அவரிடமிருந்து வெளிப்படும் எச்சிலின் பெரிய துகள்கள், அவரிடமிருந்து, 2 மீட்டர் துாரத்துக்குள் கீழே விழுந்துவிடும். ஆனால், 'ஏரோசோல்' எனப்படும், எச்சிலின் சிறிய துகள்கள், காற்றில், 10 மீட்டர் துாரம் வரை பரவும். இந்த ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும்.







நல்ல காற்றோட்டம்

காற்றிலிருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு, தன் மூக்கையோ, கண்களையோ தொட்டால், அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள், மூடப்பட்ட இடங்கள், காற்று வசதி இல்லாத இடங்கள் போன்ற இடங்களில், இந்த ஏரோசோல்கள் விழுந்தால், வைரஸ் தொற்று வேகமாக பரவும். 





அதனால், வைரஸ் பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், கிருமி நாசினிகளை பயன்படுத்தி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக, நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில், மக்கள் இருப்பது நல்லது. ஏனெனில், காற்றோட்டம் உள்ள பகுதிகளில், வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் ஜன்னல்களை திறந்து, காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.



இவ்வாறு அந்த வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad