பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தரம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, May 27, 2021

பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தரம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்...

பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தரம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஸ்...


 பிரச்சனைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.



தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, கருத்துரை வழங்கினார்.



அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ''சென்னையில் மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி ஆசிரியர் குறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குக் கல்வித் துறை சார்பில், குழு அமைத்து ஓரிரு தினங்களில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து போலீஸாரால் அந்த ஆசிரியர் கைது  செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



பிரச்சினைக்குரிய சிபிஎஸ்இ பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் குரூப்பைத் தேர்வு செய்ய பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை. பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நிலையில், எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பிளஸ் 1 சேர்க்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.



தற்போது தமிழக அரசு கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியராக நியமனம் செய்வது குறித்து வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் குறித்து மாநில சுகாதாரத் துறை, மத்திய அரசிடம் கேட்டுள்ளது'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி தெரிவித்தார்.



பின்னர், தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமினையும், அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad