இனி சும்மா இருக்க மாட்டேன்; ஈபிஎஸ்க்கு எதிராக காய் நகர்த்தும் ஓபிஎஸ்!
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியதில் இருந்தே அவருடைய அரசியல் களம் இறங்கு முகமாகத் தான் இருக்கிறது. கடந்த ஆட்சியில் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த நல்ல விஷயம் என்றால் துணை முதல்வர் பதவி மட்டும் தான். அதிமுகவின் தலைமைப் பொறுப்பிற்கும் சரிசமமான போட்டியாக எடப்பாடி பழனிசாமி அமர்ந்து கொண்டார். அதன்பிறகு ஆட்சியிலும், கட்சியிலும் ஈபிஎஸ் தலையீடு ஓபிஎஸ்சை தொடர்ந்து கோபம் கொள்ளச் செய்தது.
இந்த சூழலில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சி தலைவர் வரை எல்லா விஷயங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்தார். தனது ஆதரவு அமைச்சர்கள், நிர்வாகிகளைக் கொண்டு அதிமுகவில் தற்போது வரை எடப்பாடி பழனிசாமி கோலோச்சி வருகின்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் அறிக்கை போர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தாமல் ஓ.பன்னீர்செல்வம் தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இந்த விவகாரம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் எடுத்துரைத்தனர். அதன்படி தனியாக அறிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.
இந்த சூழலில் கட்சிக்குள் மற்றொரு விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. ஆனால் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவோ மிகவும் மென்மையான போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனால் விழிப்படைந்த எடப்பாடி பழனிசாமி தனது போக்கை மாற்றிக் கொண்டார்.
No comments:
Post a Comment