இரண்டு பதவிகள், மூன்று கட்சிகள்; திமுக போடும் அரசியல் கணக்கு என்ன?
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும், திமுக கூட்டணியும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். திமுக கூட்டணியில் இடம்பிடித்த கட்சிகளில் ஒன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இவர்களுக்கு கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் என மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மூன்று தொகுதிகளிலும் தோல்வியை தழுவினர்.
இவர்களை ஆறுதல் படுத்தும் விதமாக முக்கிய பதவி ஒன்றை வழங்க திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த மார்ச் மாதம் எம்.பி முகமது ஜான் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் வக்ஃபு வாரியத் தலைவராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே முகமது ஜான் மறைவால் தலைவர் பதவி காலியாகியுள்ளது. இந்த இடத்தை கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இல்லையெனில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் நியமன பதவி அளிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வக்ஃபு வாரிய தலைவர் பதவியோ அல்லது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் பதவியோ, இரண்டில் ஒன்றை தங்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று திமுகவிடம் மனிதநேய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இக்கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர்
தமீமுன் அன்சாரி தெரிவித்திருந்தார். இதனைக் கருத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட இரண்டு பதவிகளில் ஒன்றை தங்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு இடையில் புகுந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,
தங்கள் கட்சிக்கு தான் அப்பதவிகளை தர வேண்டும் என்று திமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம். எனவே இரண்டு பதவிகளுக்கு மூன்று இஸ்லாமிய கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இனி முடிவு திமுகவின் கையில். எதிர்கால அரசியல் தேவையை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் சரியான முடிவை எடுப்பார் என்று கூறுகிறார்கள் அரசியல் விவரம் தெரிந்தவர்கள்.
No comments:
Post a Comment