ஹலோ நான் சசிகலா பேசுறேன்; புது ரூட்டுக்கு எஸ்கேப் ஆகும் மாஜிக்கள்!
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஜனவரியில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் சசிகலா. இதையடுத்து தலைகீழாக மாறியிருந்த அதிமுகவை தன்வசப்படுத்துவார். தலைமை பொறுப்பில் அமர்ந்து அதிரடி காட்டுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறி அதிர்ச்சி அளித்தார். இது அவரது தொண்டர்களை மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் ஜெயலலிதா உடன் 30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் செய்தவரால் அவ்வளவு எளிதாக ஒதுங்கியிருக்க முடியாது.
விரைவில் திரும்பி வரக்கூடும் என்று சிலர் ஆருடம் கூறினர். அதனை தற்போதைய நிகழ்வுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மன்னார்குடியில் தனது உறவினர்களை சந்தித்து விட்டு ஓய்வில் இருந்து வரும் சசிகலா, தனது ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாக தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதொடர்பான ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில், நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன். அதிமுகவை மீட்டெடுப்பேன்.
தொண்டர்கள் ஆதரவுடன் கட்சியை நிர்வகிப்பேன். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், அமமுகவும் ஒன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைந்திருக்கும். சிலரின் சுயநல எண்ணத்தால் எல்லாம் கைவிட்டுப் போனது. நான் சிறைக்கு செல்லும் போது அனைவருக்கும் நல்லது தானே செய்துவிட்டு போனேன். அப்படியிருக்கையில் எனக்கு ஏன் துரோகம் செய்தார்கள்.
No comments:
Post a Comment