மின்கட்டணம் செலுத்த புதிய சலுகை: அமைச்சர் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 11, 2021

மின்கட்டணம் செலுத்த புதிய சலுகை: அமைச்சர் அறிவிப்பு!

மின்கட்டணம் செலுத்த புதிய சலுகை: அமைச்சர் அறிவிப்பு!



கொரோனா பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், 10.05.21 முதல் 24.05.21 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டில் இருந்து 60ஆவது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின் கணக்கீடு செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மே 2019ஆம் ஆண்டில் கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டு தொகையாக கருதி செலுத்த வேண்டும்.


புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு இல்லாதவர்கள் மே 2021க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியலின்படி, அதாவது மார்ச் 2021-இன் கணக்கீட்டின் படி,மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்த வேண்டிய கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2021 மே மாதத்திற்கான கட்டணம் 2021 ஜூலை மாதம் முறைப்படுத்தப்படும். மே மாதத்திற்கான கணக்கீட்டு தொகை மின்நுகர்வோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சிறு, குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. ஏப்ரல் மாத மின்கட்டணம் செலுத்தாத உயர்மின்னழுத்த மின்இணைப்புகளுக்கும் தாமதக் கட்டணத்துடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த ஊரடங்கில் பன்மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஊரடங்கு காரணமாக வீடுகள் தோறும் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனால் மின் கட்டணம் செலுத்துவதற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “கடந்த மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்திற்கு 2019ம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தினையே செலுத்தலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வாய்ப்பினை 85 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படியே மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஆனால், 15 சதவீதம் பேர் இந்த முறையில் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்து வருகிறார்கள். அதனால் இதற்கு தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டுள்ளது. மே மாத கட்டணத்தை செலுத்தினால் அதிக கட்டணம் வருகிரது என்று நினைப்பவர்கள், மே மாதத்திற்கு முந்தைய ஏப்ரல் மாத மின் கட்டணத்தினை செலுத்தலாம்” என்றார்.

அதுவும் இல்லாவிடில், மின்மீட்டரில் பதிவாகி இருக்கும் மின் பதிவு அளவீட்டினை செல்போனில் படம் பிடித்துக்கொண்டு போய் மின் அலுவலகத்தில் காட்டினால் அதை கணக்கீடு செய்து வரும் தொகையினையும் செலுத்தலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad