ரூ.10 லட்சம் நிதி: இதுதான் தோழர் சங்கரய்யா!
இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதி தோழர் சங்கரய்யா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் சங்கரய்யா தனது பணிகளுக்காக மற்ற அரசியல்வாதிகளுக்கு எப்போதும் முன்னுதாரணமாக திகழ்பவர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது நிதி ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு அரசுக்கே வழங்குவதாக தோழர் சங்கரய்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “ எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ.10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
“மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன். சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தோழர் சங்ரய்யா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment