நீட் குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது: மத்திய அரசு பதில் மனு!
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதற்கு தடை விதிக்க கோரிதமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் மீது விசாரனை நடத்திய நீதிமன்றம், நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக தமிழக அரசு செயல்பட முடியாது என்று தெரிவித்ததுடன், நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் தமிழக அரசு அனுமதி பெற்றதா என்று கேள்வி எழுப்பி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழுவை நியமிக்க முடியாது என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசு அமைத்த குழு நியமனம் மாநில அரசின் அதிகார வரம்பு மீறல் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாடு அரசு நியமித்த குழு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என்றும் அதில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக சட்டமன்றத்தில் கூறியது. ஆனால் தற்போது நீதிமன்றத்தில் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டு தனது இரட்டை வேடத்தை காட்டுவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment