"சிக்சர்" அடித்த சித்து..! பஞ்சாப் காங்., தலைவராக நியமனம்! முடிவுக்கு வந்தது உட்கட்சி பூசல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

"சிக்சர்" அடித்த சித்து..! பஞ்சாப் காங்., தலைவராக நியமனம்! முடிவுக்கு வந்தது உட்கட்சி பூசல்!

 "சிக்சர்" அடித்த சித்து..! பஞ்சாப் காங்., தலைவராக நியமனம்! முடிவுக்கு வந்தது உட்கட்சி பூசல்!


பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து, அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால், மாநிலத்தில் உட்கட்சி பூசல் அதிகரித்தது.

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவாக அமைச்சர் உட்பட சில எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்தனர். இது, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் உட்கட்சிப் பூசல், கட்சி மேலிடத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பூசலை போக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர், முதலமைச்சர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக, இருவரும் தெரிவித்தனர்.


இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து, கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், சங்கத் சிங் கில்ஜியான், சுக்விந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad