அரசு ஊழியர்களுக்கு செக்: மாநில அரசு அதிரடி உத்தரவு!
கேரள மாநிலத்தில், அனைத்து ஆண் ஊழியர்களும் திருமணத்திற்கு பிறகு, வரதட்சணை பெறவில்லை என்று உறுதி அளித்து, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில், அண்மைக்காலமாக, வரதட்சணை கொடுமை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், மாநிலம் முழுவதும் வரதட்சணைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. வரதட்சணை கொடுமையைக் கட்டுப்படுத்த, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரதட்சணை தடை சட்டம் திருத்தப்பட்டது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் அனுபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கேரள அரசின் கீழ் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் தாங்கள் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் வரதட்சணை கேட்கவோ, வாங்கவோ, வற்புறுத்தவோ இல்லை என்பதை குறிப்பிட்டு கையெழுத்திட்டு அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த படிவத்தில் அரசு ஊழியர், ஊழியரின் தந்தை, ஊழியரின் மனைவி, மாமனார் உள்ளிட்டோர் கையெழுத்திட வேண்டும். இந்த படிவங்களை அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து பெற்று வருடத்திற்கு இரண்டு முறை (ஏப்ரல், அக்டோபர்) சம்பந்தப்பட்ட மாவட்ட வரதட்சணை தடுப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
வரதட்சணை கொடுப்பதோ, பெறுவதோ சிறை தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். மேலும், இதற்கான சிறை தண்டனை 5 வருடத்திற்கு குறையாமல் இருக்கும் என்றும், ரூ.15,000க்கும் குறையாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது வரதட்சணைக்கு ஏற்ப அபராதம் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment