'ஸ்டான் சாமியை பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு' - சீமான்
''சட்டத்தின் உதவியோடு, ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டான் சாமியை மோடி அரசு பச்சைப்படுகொலை செய்திருக்கிறது'' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஸ்டான் சாமி மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் குரல்கொடுத்து வரும் ஸ்டான் சாமி மத்தியில் ஆளும் மோடி அரசின் எதேச்சதிகாரப்போக்காலும், கொடுங்கோன்மை சட்ட நடவடிக்கைகளாலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, பொய் வழக்குத்தொடுக்கப்பட்டு, பயங்கரவாதியென முத்திரைக் குத்தப்பட்டுக் கொடும் சிறைவாசத்திற்கு உள்ளான நிலையில் விடுவிக்கப்பட்டு விடுவார் என நம்பியிருந்த நிலையில், மறைவெய்திவிட்டதாகத் தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பீமா கொரோகான் வழக்கின் கீழ் தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் மூலம் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, பல மாதங்கள் சிறைப்படுத்தப்பட்ட பின்னர், தனது வயது மூப்பையும், உடல்நலிவையும், தனது தரப்பு நியாயத்தையும் பலமுறை அவர் எடுத்துக்கூறியப் பிறகும்கூட, விடுவிக்காது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், பழிவாங்கும் போக்கோடும் அவரைத் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி அவரது உடல்நலனைக் குன்றச் செய்த பாஜக அரசின் செயல்பாட்டின் விளைவாகவே அவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது.
சட்டத்தின் உதவியோடு, ஜனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டான் சுவாமியை பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு. தேசியப் புலனாய்வு முகமை சட்டமானது ஜனநாயகவாதிகளை அடக்கி ஒடுக்கவே பயன்படுமென எச்சரித்தும், அதனை ஆதரித்தன திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இன்றைக்கு அச்சட்டத்தினைக் கொண்டு அடக்கி ஒடுக்கி ஜனநாயகவாதிகளைப் பலியெடுத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
No comments:
Post a Comment