பட்ஜெட் கூட்டத் தொடரில் இதை கண்டிப்பா பண்ணுங்க: கோடிட்டு காட்டிய கமல் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 19, 2021

பட்ஜெட் கூட்டத் தொடரில் இதை கண்டிப்பா பண்ணுங்க: கோடிட்டு காட்டிய கமல்

பட்ஜெட் கூட்டத் தொடரில் இதை கண்டிப்பா பண்ணுங்க: கோடிட்டு காட்டிய கமல்


திமுக தேர்தல் அறிக்கையில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் சமீபத்தில் நடைபெற்றது.
ஆனால் அந்தக் கூட்டத் தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

“வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள்.


சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொது பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துகொள்ள உதவக்கூடியது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென கோரி, 2012 ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை அதிமுக அரசு சாக்குப்போக்கு சொல்லி நிலுவையில் போட்டுவிட்டது.



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என, தன் தேர்தல் வாக்குறுதியில் (வாக்குறுதி எண்: 375) திமுக அறிவித்திருந்தது. ஆனாலும், முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் ஆளுநர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

இந்திய நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. கேரள சட்டமன்ற நிகழ்வுகளும் இணைய வழியில் வெப் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இதற்கென்றே தனியாக ஒரு யூடியூப் சேனலும் உள்ளது.

நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும். தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து என்னவாக இருக்கிறதென்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாக இருப்பதுடன், பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கக்கூடும்.



கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிகளவில் ஊடகவியலாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடுவதை இந்த நேரடி ஒளிபரப்பு குறைக்கக்கூடும். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டுக்கு இணைய வழி நேரடி ஒளிபரப்பு செய்வது ஒரு சவாலான விஷயமாக இருக்காது.

No comments:

Post a Comment

Post Top Ad