3 பெண் நீதிபதிகள் உட்பட 9 நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக் குழு, பெண் நீதிபதிகள் உட்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்துள்ளது.
தற்போது, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது. ஏனெனில் கடந்த ஓரிரு வருடங்களில் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். சமீபத்தில் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் ஓய்வு பெற்றார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு
உள்ளன.
இந்தியாவின் பெண் தலைமை நீதிபதிக்கான குரல் நீண்ட காலமாகவே ஒலித்து வரும் நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை பரிசீலித்து, நீதிபதி பி.வி. நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால், அவர் 2027-ல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார்.
கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் பி.வி. நாகரத்னா. இவர் பின்னர் நிரந்தர நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டார். இவருக்கு இன்னும் பல ஆண்டுகள் பணிக்காலம் உள்ளதால் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு உள்ளது. இவரது தந்தை ஈ.எஸ். வெங்கட்ராமையா 1989 ஜூன் முதல் டிசம்பவர் வரை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment