ஆகஸ்ட் 31 வரை மீண்டும் முழு ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு!
நியூசிலாந்து நாட்டில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இம்மாத இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் - 19 எனப்படும்
கொரோனா வைரஸ் தொற்று, முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரசில், ஸ்பெயின், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவியது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, உலக நாடுகள் அமல்படுத்தின.
சர்வதேச அளவில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், குறைந்த காலத்திலேயே, அந்நாட்டில் கொரோனா பரவல்
கட்டுப்படுத்தப்பட்டு, பொது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆக்லாந்து நகரில், கடந்த வாரத்தில், ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து, 3 நாட்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கை, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அமல்படுத்தினார்.
இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் டெல்டா வகை கொரோனா தொற்று என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதை அடுத்து அமலில் உள்ள முழு ஊரடங்கை இம்மாத இறுதி வரை அதாவது வரும் 31ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment